இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும், அதன் கீழ் தொடர்ந்து கைதுகளும் தடுத்து வைப்புகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை கவலை கவலை வெளியிட்டுள்ளது. இந்தச் சட்டம் அதன் மிகப்பரந்த விதிகள் மற்றும் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் தரநிலைகளுடன் ஒத்துப்போகாத தன்மை காரணமாக நீண்டகாலமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
சமீபத்திய நிகழ்வுகள், பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்த தொடர்ச்சியான கவலைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. அவற்றில் ஒன்றாக, 24 வயதுடைய தமிழ் ஹிப்-ஹாப் (hip-hop) கலைஞர் சங்கீதன் கணேஷ்குமார் என்பவரின் வழக்கு அமைந்துள்ளது. அவர் ஜூன் 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு, சமூக ஊடகத் தளங்களிலும் பகிரப்பட்ட அவரது கலைநிகழ்ச்சி ஒன்றின் காரணமாக ஜூன் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது கலைநிகழ்ச்சியானது தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) மகிமைப்படுத்துவதாக அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பரந்த மற்றும் தெளிவற்ற முறையில் வரையறுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சர்வதேச சட்டத் தரநிலைகளுடன் ஒத்துப்போகவில்லை. சங்கீதன் கணேஷ்குமாருக்கு எதிராக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, சர்வதேச நியாயமான விசாரணைத் தரநிலைகளுக்கு இணங்க சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இலங்கை அதிகாரிகள் அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
அதே வாரத்தில், 2019 ஏப்ரல் மாதம் 250 க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய கொடூரமான உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், கடந்த பிப்ரவரி 25 அன்று கைது செய்யப்பட்ட முன்னாள் அரச புலனாய்வுச் சேவைத் தலைவர் சுரேஷ் சல்லேயின் தடுத்து வைப்பு முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றவில்லை என்றும், அவர் காவலில் இருக்கும்போது அனிதேசியமான (inhumane) முறையில் நடத்தப்படுவதாகவும் அவரது குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் பகிரங்கமாகக் கவலைகளை எழுப்பியுள்ளனர். கொடூரமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டிய பொறுப்பு இலங்கை அதிகாரிகளுக்கு உள்ளது. இத்தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள், முறையான சட்ட நடைமுறைகள் மற்றும் நியாயமான விசாரணைக்கான உரிமைகளை முழுமையாகப் பின்பற்றுவதன் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வழக்குகளிலும் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இச்சட்டத்தின் பயன்பாட்டின் நோக்கம் மற்றும் விதம் குறித்து மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது.
தற்போதுள்ள வடிவத்தின்படி, போதுமான பாதுகாப்பு வழிமுறைகள் இல்லாததன் காரணமாக, சித்திரவதைகள் மற்றும் பிற வகையான கொடூரமான நடத்தைகளுக்கு சாதகமான சூழ்நிலைகளை ஏற்படுத்துவது உட்பட, தன்னிச்சையான மற்றும் துஷ்பிரயோக நடைமுறைகளுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து வழிவகுக்கிறது.
சர்வதேச மன்னிப்புச்சபை கவலைஇலங்கை அதிகாரிகளிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) துஷ்பிரயோகம் மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் உடனடியாக விசாரிக்க வேண்டும்;
-
சித்திரவதைகள் மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது அவமதிப்பான நடத்தைகள் அல்லது தண்டனைகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும். மேலும், சுரேஷ் சல்லே உட்பட பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளுக்கும் முறையான சட்ட நடைமுறைகளுக்கான உத்தரவாதங்களை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டும்;
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பயன்பாட்டிற்கு உடனடியாக தற்காலிகத் தடை (moratorium) விதிக்க வேண்டும்; மற்றும்
-
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தாமதமின்றி நீக்க வேண்டும்.