இலங்கை நீதித்துறை வரலாற்றில் ஒரு மாற்றத்தக்க யுகத்திற்குள் பிரவேசிக்கும் வகையில், இலங்கை உயர் நீதிமன்றம் வழக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்து ஆவணங்களற்ற முறையில் வழக்கு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கை உயர் நீதிமன்றத்தினால் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த (e-filing) செயலி முறைமையானது, டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதற்கமைய, இந்த மின்னணு கோப்பு முறைமை 2026 பிப்ரவரி 10 முதல் இயங்கத் தொடங்கியதுடன், சட்டத்தரணிகள் இந்தச் செயலி மூலம் மின்னணு முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு
உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்முறையின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது ஏராளமான வழக்குகள் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்தச் செயல்முறையின் ஒரு முக்கிய கட்டமாக, 2026 மார்ச் 26 அன்று உயர் நீதிமன்றத்தின் பகிரங்க நீதிமன்றத்தில் காகிதங்களற்ற மின்னணு முறைமை அடிப்படையிலான முதலாவது வழக்கு விசாரணை நடைபெற்றது. பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையில், நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர மற்றும் நீதியரசர் கலாநிதி சோபித ராஜகருணா ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இது இடம்பெற்றது.
இந்த வழக்கு மேலும் சிறப்பம்சத்தைப் பெறுவதற்கு காரணம், இது 2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தமை தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கின் தீர்ப்புக்கமைய, அரசாங்கத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டிருந்த 3 மில்லியன் ரூபாய் நட்டஈட்டுத் தொகையை வழங்கத் தவறியமைக்காக, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்காகும்.
வழக்கு பகிரங்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கைப் பரிசீலிப்பதற்காக பாரம்பரியக் கோப்புகளுக்குப் பதிலாக, உயர் நீதிமன்றத்தினால் தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் வழக்குக் கோப்பை நீதியரசர்கள் கணினி மூலம் பயன்படுத்தினர்.
பிரதிவாதிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு குற்றப்பத்திரிகையை உயர் நீதிமன்றப் பதிவாளர் மனோதி ஹேவாவசம் பகிரங்க நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டியதுடன், குற்றப்பத்திரிகையில் தனது டிஜிட்டல் கையொப்பத்தை இட்டு மின்னணு முறைமையில் வெளியிட்டதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அதனை
அணுக வழிவகை செய்தார். குற்றச்சாட்டுகள் தொடர்பான மேலதிக விசாரணை 2026 மே மாதம் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதன் மூலம் ஆவணங்களற்ற வழக்கு விசாரணை எனும் புதிய அனுபவத்தை இலங்கை மக்களுக்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இந்த புதிய செயலியானது பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட நீதித்துறையை டிஜிட்டல் மயமாக்கும்
“ஈ கோட்” திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாகும். உயர் நீதிமன்றத்தினால் இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மாத்திரம் இது உருவாக்கப்பட்டமை இதன் சிறப்பம்சமாகும். இக்கட்டமைப்பை இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் உதவிப் பொது முகாமையாளர் (இணையதள வடிவமைப்பு) உவிந்து அனுராத உருவாக்கியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி மூலம் மிகவும் பயனுள்ள மற்றும் குறைந்த செலவிலான வழக்குத் தாக்கல் முறையை முன்னெடுக்க முடியும் என்பதுடன், எழுதுகருவிகளுக்காக செலவிடப்படும் பாரிய அளவிலான வெளிநாட்டு அந்நியச் செலாவணி மற்றும் செலவுகளைச் சேமிக்க முடியும். மேலும், இம்முறையிலுள்ள வசதி காரணமாக சட்டத்தரணிகள் பெருமளவில் மின்னணு முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இலங்கை முழுவதிலுமுள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் இம்முறையை விரைவில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.