இலங்கையின் பொருளாதாரக் கண்ணோட்டம் மற்றும் பிரித்தானியா – இலங்கை இடையிலான உறவுகள் குறித்து விவாதிப்பதற்காக, இலங்கைக்கான பிரித்தானியாவின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு (APPG) அண்மையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் முறைசாரா விளக்க அமர்வு ஒன்றை நடத்தியது.
பிரித்தானியாவை தளமாகக் கொண்ட முன்னணி பொது விவகார சிந்தனைக் குழுவான ‘ஓடிஐ குளோபல்’ (ODI Global) தயாரித்த, இலங்கையின் கடன் நெருக்கடி மற்றும் பொருளாதார மாற்றம் குறித்த பகுப்பாய்வு அறிக்கைகளை விவாதிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும். இந்த அமர்வுக்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் ஆண்ட்ரூ ஸ்னோடன் (Andrew Snowdon MP) தலைமை தாங்கினார்.
பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர தனது ஆரம்ப உரையில், 2022 கடன் நெருக்கடிக்குப் பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவதில் அடைந்துள்ள முன்னேற்றத்தைச் சுட்டிக்காட்டினார். சர்வதேச பங்காளிகள், பலதரப்பு நிறுவனங்கள் மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட இருதரப்பு பங்காளிகளுடன் தொடர்ந்து ஒத்துழைப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதுடன், தற்போதைய உலகளாவிய நெருக்கடிகளால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளையும் குறிப்பிட்டார்.
ஓடிஐ குளோபல் (ODI Global) அமைப்பின் சிரேஷ்ட ஆய்வாளர் கலாநிதி கணேசன் விக்னராஜா மற்றும் பேராசிரியர் டிர்க் வில்லெம் டெ வெல்டே ஆகியோர் கலந்துரையாடலில் பங்களித்தனர். அவர்கள் இலங்கையின் பொருளாதார மீட்சி, பின்னடைவைத் தாங்கும் திறனை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் கொள்கை ஆதரவு மூலம் நாட்டின் பொருளாதார மாற்றத்தை மேலும் முன்னெடுக்கக்கூடிய துறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிதித் துறைகளில் பிரித்தானிய முதலீடுகளுக்கான வளர்ந்து வரும் வாய்ப்புகளை கலாநிதி கணேசன் விக்னராஜா சுட்டிக்காட்டினார்.