இந்தியாவில் பொதுமுடக்கம் தொடர்பாக வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அப்படி எந்த ஒரு திட்டமும் அரசின் பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
ஈரான் போர் காரணமாக எரிபொருட்களுக்கான பற்றாக்குறை அதிகரித்து, கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டது போன்ற ஒரு பொதுமுடக்கம் மீண்டும் ஏற்பட இருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்பப்படும் நிலையில், மத்திய அரசு அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘உலகளாவிய நிலைமை தொடர்ந்து நிலையற்றதாகவே உள்ளது. எனவே, எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள், அத்தியாவசியப் பொருட்கள் தொடர்பான களநிலவரங்களை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான நமது அரசு, குடிமக்களுக்கு எரிபொருள், எரிசக்தி, பிற அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சவால்களை சமாளிக்க நாங்கள் முழு அளவில் தயாராக இருக்கிறோம்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதில் இந்தியா தனது திறனை தொடர்ந்து வெளிப்படுத்தி உள்ளது. மேலும், நாங்கள் சரியான நேரத்தில், திட்டமிட்ட முறையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம். வதந்திகளைப் பரப்பி பீதியை உருவாக்கும் முயற்சிகள் பொறுப்பற்றவை மற்றும் தீங்கு விளைவிப்பவை’’ என்று தெரிவித்துள்ளார்.