அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் கிடப்பில் போட்டுள்ளார்கள். முறைப்பாடளிப்பவர்களை குற்றவாளிகளாக்கும் போக்கு தற்போது காணப்படுகிறது. பொலிஸ்மா அதிபர் தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா அதிபராக செயற்படுகிறாரென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது.
தனியார் தொலைக்காட்சி தொடர்பில் அரசாங்கம் வெறுப்புடன் செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சகல ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
சிறந்த அரசியல் கலாசாரத்தையும், நிர்வாக கட்டமைப்பையும் உருவாக்குவதாக குறிப்பிட்டுக் கொண்டே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் ஆளும் தரப்பின் ஊழல் மோசடிகள் வெளியாகின. ஒருசிலர் இல்லாத கலாநிதி பட்டங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்கள்.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் போது பொலிஸார் எவ்வித விசாரணைகளையும் இதுவரையில் முன்னெடுக்கவில்லை.
முன்னிலை சோசலிச கட்சி காரியாலத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இன்றுவரை விசாரணைகள் ஏதும் இல்லை.
கொள்கலன்கள் விவகாரம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளிக்கப்பட்டது. எவ்வித விசாரணைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.
குற்றச்சாட்டுக்களை சுட்டிக்காட்டி முறைப்பாடளிக்கும் தரப்பினரை குற்றவாளிகளாக்கும் செயற்பாடுகளை பொலிஸார் தற்போது மேற்கொண்டுள்ளார்கள்.
ஆளும் தரப்பின் உறுப்பினர் பத்மகுமார விவகாரத்திலும் இவ்வாறான தன்மையே காணப்படுகிறது. தேசிய மக்கள் சக்தியின் பொலிஸ்மா அதிபராகவே தற்போதைய பொலிஸ்மா அதிபர் செயற்படுகிறார். இது முறையற்றது என்றார்.
By C.G.Prashanthan