கஹதுடுவ பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை வளாகத்தினுள் பெண் ஊழியர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புலத்சிங்கள, கோவின்ன பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய எல்.ஆர். கிம்ஹானி பெரேரா என்ற திருமணமாகாத யுவதியே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் குறித்த ஆடைத் தொழிற்சாலையில் குழுத் தலைவியாக (Team Leader) பணியாற்றி வந்துள்ளார்.
இந்த கொலையை செய்ததாக சந்தேகப்படும் , அதே தொழிற்சாலையில் உதவியாளராக பணியாற்றிய திருமணமான ஊழியர், சம்பவத்தின் பின்னர் தலைமறைவாகியுள்ளார். பதுளை, கெப்பெட்டிபொல பகுதியைச் சேர்ந்த இவர், தற்காலிகமாக கஹதுடுவ பகுதியில் தங்கியிருந்து வேலை செய்துள்ளார்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரத்தம் படிந்த கூர்மையான கத்தி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
உயிரிழந்த யுவதி கடந்த ஆண்டு பெப்ரவரி 18ஆம் திகதி பணியில் இணைந்துள்ளதுடன், சந்தேகநபர் 2024 ஓகஸ்ட் 06ஆம் திகதியிலிருந்தே பணியில் இணைந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.