அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் தேசிய உளவுத்துறை பணிப்பாளராக (Director of National Intelligence – DNI) பணியாற்றி வந்த துளசி கப்பார்ட் (Tulsi Gabbard) தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதவி விலகல் கடிதத்தில்,
தனது கணவருக்குக் கண்டறியப்பட்டுள்ள ஒரு அரிய வகை எலும்புப் புற்றுநோய் பாதிப்பு காரணமாக, இந்த இக்கட்டான சூழலில் அவருடன் இருக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதால், பணிச்சுமை மிகுந்த இந்த பதவியில் இருந்து விலகுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதவி விலகல் எதிர்வரும் ஜூன் 30 முதல் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை முதன்மை துணை பணிப்பாளர் ஆரோன் லுகாஸ் (Aaron Lukas) தற்காலிக பணிப்பாளராக செயல்படுவார் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த பதவியை மிகச் சிறப்பாக வகித்ததாக துளசி கப்பார்டிற்கு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ள போதிலும், ஈரான் மீதான அணுகுமுறையில் இருவருக்கும் இடையே சில கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், துளசி கப்பார்ட் வெள்ளை மாளிகையால் பதவியிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும் ஊடகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.