வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி கவிரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (5) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
உயிரிழந்த பெண்ணொருவரின் உடல் வைத்தியசாலையில் உள்ள பிரேத அறையில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் கண்டிக்க வேண்டும் என்பதுடன், இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.
இப்போது மகளிர் விடயங்கள் தொடர்பில் நாங்கள் கதைக்கின்ற போது விடுமுறை இன்றி, சம்பளம் இன்றி 24 மணிநேரமும் பணியாற்றும் பெண்கள் வீடுகளில் உள்ளனர். இவர்களுக்காக நலன்புரிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நாட்டில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான தேசிய கொள்கைத் திட்டத்தை இந்த வருடத்தில் செயற்படுத்துமாறு கோருகின்றோம்.
நான் அண்மையில் தும்பர புனர்வாழ்வு மத்திய நிலையத்திற்கு சென்றிருந்தேன். அங்கு கணவனின் தவறுக்காவும், பாலியல் இலஞ்சம் வழங்காத காரணத்தினாலும் மற்றும் பிணை வழங்க முடியாமலும் பெண்கள் பலர் அங்கு இருக்கின்றனர். இவர்களிடையே பலர் இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீண்ட காலமாக வராதவர்களும் இருக்கின்றனர். இதற்காக முறையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு கோருகின்றேன் என்றார்.