தனது குழந்தைகளைப் பராமரிப்பதற்காக கனடாவுக்கு வந்த ஒருவருக்கு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒஷாவா (Oshawa) நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக டர்ஹாம் (Durham) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், இவரால் பாதிக்கப்பட்ட வேறு சிலரும் இருக்கக்கூடும் என புலனாய்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையின் செய்திக்குறிப்பின்படி, பாதிக்கப்பட்ட நபர் 2025 ஆம் ஆண்டில் முகநூலின் (Facebook) ‘அவ் பெயர்’ (au pair – தங்கிப் பணிபுரியும் பராமரிப்பாளர்கள் குழு) குழுவொன்றின் மூலம் பல குழந்தைகளைக் கொண்ட தம்பதியரைத் தொடர்புகொண்டு, கனடாவில் “முறையற்ற” முறையில் வீட்டில் தங்கிப் பணிபுரியும் பராமரிப்பாளராக வேலை செய்ய வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் அந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் பெல்ஜியத்திலிருந்து கனடாவுக்குக் குடிபெயர்ந்து, குழந்தைகளைப் பராமரிப்பதற்குப் பதிலாக சந்தேகநபர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகக் காவல்துறையினர் CTV செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி, சந்தேகநபர் பாதிக்கப்பட்ட நபருக்கு ஐஸ்கிரீம் கொடுத்ததாகவும், அதை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே அவர் சுயநினைவை இழந்து மயக்கமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர். அன்று இரவு நடந்த எதையும் அவரால் நினைவுபடுத்த முடியவில்லை என்றும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
“பாதிக்கப்பட்ட நபர் மருத்துவ உதவியை நாடியபோது, அவரது உடலில் ஒரு நச்சு மருந்து (noxious drug) கலந்திருப்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது,” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
புலனாய்வாளர்கள் ஒஷாவாவில் உள்ள சந்தேகநபரின் வீட்டில் சோதனை ஆணை (search warrant) மூலம் சோதனை நடத்தியபோது, அங்கிருந்து பல “மின்னணு சாதனங்கள்” மற்றும் டிசம்பர் 12 சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட அதே நச்சு மருந்து ஆகியவற்றை மீட்டெடுத்துள்ளனர். அத்துடன், குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான ஆவணங்களும் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
38 வயதுடைய டெரெக் ஸ்டீபன் பெல்லாமி (Derek Stephen Bellamy) என அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர் மீது பாலியல் வன்கொடுமை, நச்சுப் பொருட்களை உட்கொள்ளச் செய்தல், ரகசியமாகக் கண்காணித்தல் (voyeurism) மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட பதிவுகளை வைத்திருந்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தலா ஐந்து வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும், குழந்தை பாலியல் துஷ்பிரயோக ஆவணங்களை வைத்திருந்தல் மற்றும் அவற்றை இணையத்தில் பார்வையிட முயன்றமை ஆகிய குற்றச்சாட்டுகளும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
வியாழக்கிழமையன்று பெல்லாமியின் புகைப்படத்தை வெளியிட்ட காவல்துறையினர், இவரால் பாதிக்கப்பட்ட மேலும் சில நபர்கள் இருக்கக்கூடும் எனத் தமக்குக் கவலை இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
“இந்தச் சம்பவம் அல்லது இது போன்ற வேறு சம்பவங்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள், சிறப்புப் பாதிக்கப்பட்டோர் பிரிவின் (Special Victims Unit) டிடெக்டிவ் டன்பாரை 1-888-579-1520 (ext. 5344) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.