வடக்கு மாகாணத்தில் இந்தியாவின் முதலீடுகள் வருவதை கவனத்தில் கொண்டு தென்னிலங்கை அதிகமாக அச்சப்படுவது ஏன் என்று ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், வடக்கு மாகாணத்தில் அதிகமான மக்கள் அரசாங்கத்தின் கொள்கையிலிருந்து வேறுபட்டவர்களாக இருக்கின்றபோதும், இளைஞர்கள் அதிகமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட அவரது அரசாங்கத்தின் மீது ஈர்ப்புடையவர்களாக இருக்கின்றமை தொடர்பிலும் கரிசனைகளைச் செலுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையிலான குழுவினர் அங்குள்ள தனியார் விடுதியொன்றில் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் குழுவொன்றைச் சந்தித்து உரையாடியிருந்தனர்.
இதன்போது, சமகால நிலைமைகள் சம்பந்தமாக தகவல்களை கேட்டறிந்த தூதுக்குழுவினர், புதிய அரசாங்கத்தின் கீழான வடக்கு மக்களின் மனோநிலைகள் மற்றும் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடினார்கள்.
அதன்போது, ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரேனோ, வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கொள்கையில் அதிகமான ஈடுபாட்டைக் கொண்டிருக்கின்ற நிலையில் இளைய சமுதாயத்தினர் அதாவது புதிய ஜென் இஸட் பரம்பரையினர் அதிகமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் அவரது அரசாங்கத்திற்கு ஈர்ப்புடையவர்களாகவும், ஆதரவை வெளிப்படுத்துபவர்களாகவும் இருப்பதற்கு என்ன காரணம் என்று கேள்வி எழுப்பியுள்ளது.
இதன்போது, இளையோர் அதிகமாக போரின் பின்னர் பிறந்தவர்கள் என்பதோடு அவர்கள் அரசாங்கத்தின் சமூக ஊடங்களின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட கவர்ச்சிகரமான பிரசாரங்களால் கட்டுண்டுள்ளதாகவே அவ்விதமான நிலைமை காணப்படுவதாக பதிலளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் முதலீடுகள் அதிகமாக வடக்கில் முன்னெடுப்பதற்குரிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றபோதும் அவை தொடர்பில் தென்னிலங்கைக்கு விசேட அவதான நிலைமைகள் இருப்பதோடு தாமதப்படுத்தப்படும் நிலைமைகளும் நீடிக்கின்றன என்றும் தூதுவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது, இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் போதான சூழலில் இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்கள் தென்னிலங்கையில் எதிர்மறையான தோற்றப்பாட்டைக் கட்டியெழுப்பியுள்ளதோடு தமிழகத்தில் பெருந்தொகையான தமிழர்கள் இருப்பது அந்த அச்சம் நீடிப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பதாக பதிலளிக்கப்பட்டது.