ரோமானிய பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், பிரதமர் இலி போலோஜன் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.
இந்த அரசியல் குழப்பம் நாட்டின் இறையாண்மை கடன் மதிப்பீடு, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவி மற்றும் நாட்டின் நாணயத்தின் ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தின் 330 உறுப்பினர்களில், அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக 281 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தீவிர வலதுசாரி கட்சிகளின் எழுச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நான்கு கட்சிகள் இணைந்து இந்த ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுக் கூட்டணியை உருவாக்கின. எனினும், கடந்த ஏப்ரல் மாத இறுதியில், பாராளுமன்றத்தின் மிகப்பெரிய கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி, கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சியான தீவிர வலதுசாரி கட்சியுடன் கைகோர்த்து இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது.
ரோமானிய பிரதமர் போலோஜன் மேற்கொண்ட சிக்கன நடவடிக்கைகள், சமூக ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களைப் பாதித்ததே இந்த முரண்பாட்டுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழலால் ரோமானியாவின் நாணயமான ‘லேயு’ (Leu), யூரோவுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் குறைந்த வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
மேலும், நடப்பு ஆண்டில் நாட்டின் வரவு செலவு திட்டம் பற்றாக்குறையை 6.2 சதவீதமாகக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் ரோமானியா உள்ளது. இந்த அரசியல் குழப்பத்தால், ஆகஸ்ட் மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பெற வேண்டிய 10 பில்லியன் யூரோ மீட்பு நிதியைப் பெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
வாக்கெடுப்புக்கு முன்னதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் இலி போலோஜன்,
“நாளை முதல் ரோமானியா எவ்வாறு இயங்கும் என யாராவது கூற முடியுமா? உங்களிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? பொதுப் பணத்தை மதித்து நேர்மையாகவும் வித்தியாசமாகவும் ஆட்சி செய்ய முடியும் என்பதை ரோமானிய மக்கள் புரிந்து கொள்வார்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.
அந்நாட்டில் பாராளுமன்றத் தேர்தல் 2028 ஆம் ஆண்டு வரை இல்லாத நிலையிலும், தற்போதைய சூழலில் முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இடைக்காலப் பிரதமராகப் போலோஜன் குறைந்த அதிகாரங்களுடன் நீடிப்பார்.
மத்தியவாத ஜனாதிபதியான நிகுஷோர் டான் கட்சிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, புதிய பிரதமரின் கீழ் மீண்டும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுக் கூட்டணியை உருவாக்க முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.