அழகான கடற்கரை – ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத்தளம்” ” என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் தேசிய நிகழ்வு இன்று(23.05.2026) காலை 7.00மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டு இலங்கையில் சம நேரத்தில் முன்னெடுக்கப்பட்டது.
இந் நிலையில் யாழ். மாவட்டத்தில் கடற்கரையினை சுத்தப்படுத்தும் மாவட்ட நிகழ்வு பண்ணை கடற்கரையில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அரசாங்கத்தின் ‘Clean SriLanka’ திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருத்தல், டிஜிட்டல் மயமாக்கல், வறுமை ஒழிப்பு ஆகிய செயற்றிட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றநிலையில், கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக இன்றைய தினம் இச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த நவரத்ன அவர்களின் வழிகாட்டலிலும், 51ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரிஸ்வி ராசிக் அவர்களின் மேற்பார்வையிலும், 512ஆவது காலாட்படைப் பிரிகேடினால் பிரதான நிகழ்வு யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இச் சுத்தப்படுத்தும் வேலைத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த நவரத்ன, 51 ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரிஸ்வி ராசிக், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு க.சிவகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் ஆளுநரின் செயலாளர், யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், யாழ்ப்பாணப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர், பலாலி விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர், படையினர், பொலிஸார், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,
துறை சார்ந்த திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், மாநகர சபை ஊழியர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் சிறப்புற நடைபெற்றது.
குறித்த கடற்கரையினை தூய்மைப்படுத்தும் பணியில் குப்பை கூலங்களுடன் பெருமளவான பிளாஸ்ரிக் கழிவுகள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் 256 கரையோரச் சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு இணையாக, யாழ்.குடாநாட்டின் கரையோரங்களை உள்ளடக்கிய வகையில் 30 சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் இன்றைய தினம் நடைமுறைப்படுத்தப்பட்டன.