ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகள் தொடர்பாகக் தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தர தாக்கல் செய்திருந்த ரிட் மனுவின் மேலதிக நடவடிக்கைகளை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) இடைநிறுத்தியுள்ளது.
இந்தக் கட்டத்தில் வருண ஜயசுந்தரவைக் கைது செய்ய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்ற அமர்வுக்கு அறிவித்தார். நீதியரசர்களான சஷி மகேந்திரன் மற்றும் ஆதித்ய படபெந்திகே ஆகியோரைக் கொண்ட நீதியரசர்கள் குழாம் இந்த உறுதிமொழியைக் குறித்துக்கொண்டு, மனு மீதான பரிசீலனையை நிறைவு செய்தது.
வருண ஜயசுந்தரவை வேறொரு பகுதிக்கு இடமாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பரிசீலிக்குமாறு நீதிமன்றம் முன்னதாக சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தியிருந்தது. பொலிஸ் மா அதிபர் (IGP) இது தொடர்பான பரிந்துரையை ஏற்கனவே தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பியுள்ளார் என்பதை இன்று முன்வைக்கப்பட்ட சமர்ப்பிப்புகள் உறுதிப்படுத்தின.
தற்போது வரை அவரைக் கைது செய்ய எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்ற சட்டமா அதிபரின் உறுதிமொழியை அடுத்து, இந்த மனு மீதான மேலதிக விசாரணைகள் இடைநிறுத்தப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது