முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் 3 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை (16) கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், ஊழியர் சிலர்களின் பெயர்களைச் சேர்த்து, அவர்களுக்குரிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொண்டதன் மூலம் அரசுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால், முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவை தவிர ஏனைய பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.
கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கொழும்பு நீதவான் நீதிமன்றில் உள்ள இந்த வழக்கைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும், இதனை முடிவுக்குக் கொண்டுவருமாறும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நிதிமன்றில் கோரிக்கை விடுத்தது.
இதனை கருத்தில் கொண்ட நீதவான் வழக்கு தொடர்பான பணிகளை நிறுத்த உத்தரவிட்டுள்ளார்.