உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான துல்லியமான புலனாய்வு தகவல்கள் முன்கூட்டியே கிடைத்திருந்தும் அதனைத் தடுக்க தவறிய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுக்கு எதிராக முதலில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெள்ளிக்கிழமை (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பின்னணியில் உள்ள சூத்திரதாரி யார் என்று நேரத்தை வீணடிப்பதை விட தாக்குதலை மிக எளிதாகத் தடுத்திருக்ககூடிய பொறுப்பில் இருந்தும் அலட்சியமாக செயற்பட்டவர்களை கண்டறிவதே தற்போதைய முக்கிய தேவையாகும். நாட்டில் சிறு சண்டை நடந்தால் கூட 119 என்ற அவசர அழைப்பு மூலம் பொலிஸார் விரைந்து செயல்படும் நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் நடக்கும் இடங்கள் மற்றும் நபர்களின் பெயர்கள் உட்பட அனைத்து தகவல்களும் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் கிடைத்தும் சம்பந்தப்பட்ட தேவாலயங்களுக்கு ஒரு பொலிஸ் நிலையத்தின் வாகனத்தைக் கூட அனுப்பாமல் வேடிக்கை பார்த்தது ஏன் என்ற பலத்த கேள்வி எழுகிறது. யுத்தக் காலத்தில் கூட குண்டுதாரிகள் பற்றிய தகவல் கிடைத்தவுடன் பொலிஸார் சோதனைகளை நடத்தி அச்சுறுத்தல்கள் தவிர்க்கப்பட்ட வரலாறுகள் உள்ள நிலையில், இந்தத் தகவல் கிடைத்தும் உயர் அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும், பொலிஸார் வாகனங்களையோ அல்லது வீதித் தடைகளையோ ஏற்படுத்த வேண்டாம் என உயர் மட்டத்திலிருந்து ஏதேனும் மறைமுக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.
தாக்குதல் நடந்த 2019 ஆம் ஆண்டில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்த சானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்ற உயர் அதிகாரிகள் மற்றும் அப்போதைய பொலிஸ் உயர் மட்டத்தினர், மாகாணப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் இந்த அலட்சியத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். மேலும், அவர்களில் பலர் இன்றும் அரச சேவையிலோ அல்லது ஓய்வூதியம் பெற்றுக்கொண்டோ சுதந்திரமாக வருவது கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதக் குழுக்கள் திட்டமிடுவதை விட, அந்தத் திட்டத்தைத் தெரிந்து வைத்திருந்தும் தடுக்காமல் விட்ட பாதுகாப்புத் துறையினரின் அலட்சியமே 200க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகவும், நூற்றுக்கணக்கானோர் இன்று வரை மாற்றுத்திறனாளிகளாகப் பாதிக்கப்பட்டு போராடவும் முதன்மைக் காரணமாகும். எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமாயின், இந்தத் தகவலைக் கையாள்வதில் அலட்சியமாக இருந்த அதிகாரிகளை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும்.
மேலும், ஈஸ்டர் தாக்குதல் விசாரணை தொடர்பான குழுக்கள் நியமனத்தில் கத்தோலிக்க திருச்சபையின் கோரிக்கைகள் மற்றும் பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் விமர்சனங்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, அரசாங்கம் ஒருபுறம் சுயாதீனக் குழு என்றும், மறுபுறம் திருச்சபையின் விருப்பப்படியே அதிகாரிகள் நியமிக்கப்பட்டதாகவும் இரட்டை வேடம் போடுவதை நிறுத்தி, சட்டம் மற்றும் நீதியை அனைவருக்கும் சமமாக நிலைநாட்ட வேண்டும் என்றார்.