வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்துள்ள தகவல்களை கேட்டால், அதனை வழங்குவதில்லை. இதன் மூலம் மூலம் மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளி்க்கிழமை (12) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கி மீளாய்வு அறிக்கை தொடர்பான சபை ஒத்துவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மத்திய கிழக்கில் இடம்பெறும் யுத்தம் எமது நாட்டுக்கு போன்று உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் உலக நாடுகள் அதனை சமம்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுத்தும் இருக்கிறது. மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக உலக சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரித்தது. இந்த விலை அதிகரிப்பு உலக நாடுகளில் நூற்றுக்கு 28 வீதமாகவே இருக்கிறது. ஆனால் இலங்கையில் எரிபொருள் விலை நூற்றுக்கு 48 வீதத்தால் அதிகரித்துள்ளது.
அதேபோன்று இந்த வருடத்துக்குள் எமது நாட்டில் 6 தடவைகள் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பார்க்கையில் அந்த நாடுகளில் தற்போது எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருக்கிறது. இறுதியாக மே மாதம் 30ஆம் திகதி எமது நாட்டில் எரிபொருட்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்படும்போது, இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் 37ரூபா குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. நாங்கள் அதிகவிலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்துள்ளமையே இதற்கு காரணமாகும்.
எதிர்வரும் 5 மாதங்களுக்கு எரிபொருளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எங்களிடம் போதுமானளவு கையிருப்பு இருப்பதாக ஜனாதிபதி மார்ச் மாதம் 5ஆம் திகதி தெரிவித்திருந்தார். ஆனால் மார்ச் 3ஆம் திகதி ஒரு பீப்பாய் டீசல் 121 டொலருக்கு எடுத்திருக்கிறது. மார்ச் மாதம்20ஆம் திகதி 228 டொலருக்கு எடுத்திருக்கிறது. மார்ச் மாதம் 21ஆம் திகதி 345 டொலருக்கு எடுத்திருக்கிறது. இவ்வாறு அதிக விலைக்கு எரிபொருள் கொள்வனவு செய்திருக்கிறார்கள். அதனாலே எரிபொருட்களின் விலை இந்தளவு அதிகரிக்கப்பட காரணமாகும்.
அதேபோன்று தரமற்ற நிலக்கரி கொள்வனவு காரணமாக இரண்டு கப்பல் எரிபொருள் மின் உற்பத்திக்காக வழங்க வேண்டி ஏற்பட்டிரு்க்கிறது. முகாமைத்துவ பிரச்சினையாலே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதனால் இவ்வாறான நெருக்கடி நிலைமை ஏற்படும்போது எவ்வாறு முகாமைத்துவம் செய்துகொள்வது என்பது முக்கியமாகும். மத்திய கிழக்கு யுத்தம் காரணமாக எங்களுக்கு எரிபொருள் கொள்வனவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றே விஜித்த ஹேரத் தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்கம் ஒரு பீப்பாய் எரிபொருள் 345 டொலருக்கே கொள்வனவு செய்திருக்கிறது.
அதேநேரம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் எரிபொருள் கொள்வனவு செய்துள்ள தகவல்களை கேட்டால், அதனை வழங்குவதில்லை. அதனால் தகவல் அறியும் உரிமையை செயலிழக்கச்செய்திருப்பதாகவே தெரிகிறது. ஏனெனில் இவர்கள் தகவல்களை மறைக்கிறார்கள். வெளிப்படைத்தன்மை தொடர்பில் கதைத்த இந்த அரசாங்கம் தகவல்களை பெற்றுத்தருவதாக தெரிவித்த அரசாங்கம், அவ்வாறான அரசாங்கம் தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் மக்களின் ஜனநாயக உரிமையை இல்லாமலாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுவருகிறது என்றார்.