எந்தவொரு சந்தர்ப்பத்திலும், எந்தவொரு பிக்குவுக்கும் தனது துறவற ஆடையைக் களைந்துச் செல்லும் உரிமை உண்டு. அதற்கு எவராலும் தடைகளை விதிக்க முடியாது. பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை என ஸ்ரீபோதிராஜ அறக்கட்டளையின் ஸ்தாபகரும், எம்பிலிபிட்டிய இங்குரஆர ஸ்ரீபோதிராஜ பிக்கு பயிற்சி மையத்தின் ஆன்மீகப் பணிப்பாளருமான ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
பௌத்த பிக்கு ஒருவருக்கு மனித உரிமைகள் என்று சொல்லிக் கொள்ள எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறக்கும் போது ஜனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் சுமந்துதான் இவ்வுலகத்துக்கு வருகிறான். ஆனால், பிக்கு ஒரு நிலைப்பாட்டில் அந்த அனைத்து உரிமைகளையும் தியாகம் செய்துவிட்டுத்தான் சாசனக் கோட்பாட்டுக்குள்ளே நுழைகிறார். தனது சுய விருப்பத்தின் பேரில் தனக்கிருந்த மனித உரிமைகளை நிராகரித்துவிட்டுத்தான் அவர் துறவறத்தை ஏற்கிறார்.
அவ்வாறு துறவறம் பூணும் ஒரு பிக்கு, அன்று முதல் மூன்று விதமான சட்ட அமைப்புகளுக்குக் கட்டுப்படுகிறார். முதலாவது, விநய பிடகத்தில் புத்த பெருமானால் விதிக்கப்பட்டுள்ள பிராதிமோட்ச விதிகள். இரண்டாவது, நாட்டின் இராஜ நீதி எனப்படும் அரச சட்டம். தான் ஒரு பிக்கு என்பதற்காக நாட்டின் சட்டத்திலிருந்து விலகிவிட முடியாது. பிக்குகள் அரச சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பது தர்ம நூல்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது, சமூக ஒழுக்க விழுமியங்கள் தொடர்பான விதிகள். இந்த மூன்று சட்டப் பிரிவுகளுக்கும் பிக்குகள் அடிபணிய வேண்டும்.
மனித உரிமைகளை நிராகரித்துவிட்டு துறவறத்துக்குள் நுழைந்த பிக்குவுக்கு இருப்பது சாதாரண மனித உரிமைகள் அல்ல, அது விடுதலை குறித்த உன்னதமான உரிமையாகும். தர்மத்தின் கோட்பாடுகளைப் பின்பற்ற முடியாத ஒருவருக்கு, எந்த நேரத்திலும் துறவிக்கோலத்தை நீக்கிவிட்டுச் செல்லும் சுதந்திரம் உண்டு. ஏனைய மத நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, பௌத்த பிக்குவுக்கு இருக்கும் விசேட வரப்பிரசாதம் இதுவாகும். எனவே தனது ஆடையைக் களைந்து இல்லறத்துக்குத் திரும்புவதற்கு எவராலும் தடை விதிக்க முடியாது.
பிக்குவானவர் தனக்கு விருப்பமானதைச் செய்துகொண்டு காவி உடையில் தங்கியிருக்க மனித உரிமைகளைப் பயன்படுத்த முடியாது. அவர் தான் சுயமாக ஏற்றுக்கொண்ட பொறுப்புகளுக்கும் விதிகளுக்கும் உட்பட்டே வாழ வேண்டும். வரலாற்றில் தர்ம சங்காயனைகளின் போது, தர்மத்தைப் பாதுகாப்பதற்காகத் தகுதியற்ற ஆயிரக்கணக்கானோர் சாசனத்திலிருந்து நீக்கப்பட்டனர். தர்மசோக மன்னன், வோஹாரிக திஸ்ஸ மன்னன் மற்றும் மகா பராக்கிரமபாகு மன்னன் போன்றோரின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான சாசனச் சீர்திருத்தங்கள் இடம்பெற்றுள்ளன.
தற்போது இவ்வாறான நடைமுறைகள் சரியாகச் செயற்படாத காரணத்தினாலேயே பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. அரசாங்கம் தலையிட்டு, மகாநாயக்க தேரர்களின் ஆலோசனையுடன் சாசனச் சீர்திருத்தங்களை அடிக்கடி முன்னெடுக்க வேண்டும். அதுவே சாசனத்தின் அசிவிருத்திக்கு வழியாகும். மனித உரிமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, தமக்குத் தேவையானவற்றைச் செய்துகொண்டு துறவற ஆடையில் தங்கியிருக்க எவருக்கும் உரிமை இல்லை. இந்த விதிகளைப் பின்பற்ற முடியாதவர்கள் கௌரவமாக அதனை நீக்கிவிட்டு சாதாரண இல்லற வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். அதை விடுத்து, மனித உரிமைக் கதைகளைக் கூறிக்கொண்டு தவறான செயல்களில் ஈடுபடுவது சாசனத்தின் வீழ்ச்சிக்குத்தான் வழிவகுக்கும் என்றார்.