ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து அண்மைக்காலமாக பாரிய அளவிலான மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடி செய்பவர்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்து, WhatsApp (வட்ஸ்அப்) அல்லது நேரடித் தொலைபேசி அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்வதை இந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இவ்வாறு தொடர்புகொண்டு உரையாடும் மோசடிக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் சில மொபைல் செயலிகளை (Mobile Apps) பதிவிறக்கம் செய்யுமாறு கூறுவதும் கைபேசித் திரையை பகிருமாறு (Screen Share) கோருவதும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய OTP கடவுச்சொற்கள், வங்கி இரகசிய இலக்கங்கள் (PIN), கடன் அட்டை விபரங்கள் அல்லது ஏனைய முக்கியமான நிதித் தகவல்களைத் தருமாறு கோருவதும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் மிகுந்த எச்சரிக்கையாக செயற்படவேண்டும் என்று நிறுவனம் அறிவுறுத்துகிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமானது விமானச் சீட்டு முன்பதிவு, சலுகைகள் அல்லது வேறு எந்த நோக்கத்துக்காகவும் வாடிக்கையாளர்களை WhatsApp மூலமாகவோ அல்லது தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ தொடர்புகொள்வதில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒருபோதும் வாடிக்கையாளரின் OTP, வங்கி PIN இலக்கங்கள், கடன் அட்டை விபரங்கள் அல்லது இரகசியத் தகவல்களைக் கோருவதில்லை. அது மட்டுமன்றி, வாடிக்கையாளரின் கைபேசித் திரையைப் பகிருமாறு (Screen share) அல்லது செயலிகளை பதிவிறக்கம் செய்யுமாறு ஒருபோதும் இவ்விமான போக்குவரத்து சேவை நிறுவன ஊழியர்கள் கேட்கமாட்டார்கள் என்பதையும் உறுதிபட தெரிவித்துள்ளது.
எனவே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழியர்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் மோசடிக்காரர்கள் விடயத்தில் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இதுபோன்ற எந்தவொரு தகவல்தொடர்பையும் உடனடியாக புறக்கணித்துவிட்டு, உரிய அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கடுமையான அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
பயணிகளும் பொதுமக்களும் அனைத்து விளம்பரங்கள், சலுகைகள் மற்றும் தகவல்களை விமான நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளமான www.srilankan.com என்ற இணையத்தளம் அல்லது அதன் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக சேனல்கள் மூலம் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.