டொராண்டோவின் வெஸ்டன் (Weston) பகுதியில் கட்டவிழ்த்து விடப்பட்ட நாய் ஒன்று, சிறிய நாய் ஒன்றைத் தாக்கி கொன்றதுடன், அதன் உரிமையாளரையும் காயப்படுத்தியதைத் தொடர்ந்து டொராண்டோ காவல்துறை பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை டொராண்டோவில் நடந்த இந்தத் தாக்குதலில், “கைவிடப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த நாய்” ஒன்று சிறிய நாய் ஒன்றைக் கொன்றதாக காவல்துறை பொதுமக்களை எச்சரித்துள்ளது.
காவல்துறையினரின் தகவல்படி, மாலை சுமார் 4:10 மணியளவில் வெஸ்டன் சாலை மற்றும் லாரன்ஸ் அவென்யூ வெஸ்ட் (Weston Road and Lawrence Avenue West) பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தக் கொடூரத் தாக்குதலில் அந்தச் சிறிய நாய் உயிரிழந்ததுடன், அதன் உரிமையாளருக்கு உயிருக்கு ஆபத்தில்லாத காயங்கள் ஏற்பட்டுள்ளன.
எந்தவிதத் தூண்டுதலும் இன்றி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தாக்கிய நாய் ஒரு “பழுப்பு நிற பிட்புல் கலப்பினம்” (brown pit bull mix) என காவல்துறை விவரித்துள்ளது. தற்போது அந்த நாயின் புகைப்படங்களையும் காவல்துறை வெளியிட்டுள்ளது.
“காவல்துறை அதிகாரிகள் டொராண்டோ விலங்குகள் சேவைப் பிரிவுடன் (Toronto Animal Services) இணைந்து அந்த நாயைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்,” என்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாராவது அந்த நாயைக் கண்டால், அதன் அருகில் செல்ல வேண்டாம் என்றும், உடனடியாக 911 என்ற எண்ணுக்கு அழைத்துத் தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது