தென் கொரியாவின் தேசிய உளவு அமைப்பு வெளியிட்டுள்ள தகவல், உலக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னின் 13 வயதான மகள் கிம் ஜூ ஏ, எதிர்கால அரசியல் வாரிசாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தென் கொரியா உறுதியாக தெரிவிக்கப்படுகிறது.
இது சாதாரண ஊகக்கருத்து அல்ல என்றும், இதற்கான உறுதியான மற்றும் நம்பகமான உளவுத் தகவல்கள் தங்களிடம் உள்ளன என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படுகிறது.சமீப காலங்களில் கிம் ஜூ ஏவின் செயல்பாடுகள் இந்த தகவலுக்கு மேலும் வலுவூட்டுகின்றன.
குறிப்பாக, இராணுவப் பயிற்சிகளில் நேரடியாக பங்கேற்று, போர்டாங்கிகளை இயக்குவது முதல் துப்பாக்கி சுடும் திறன்களை வெளிப்படுத்துவது வரை அவர் ஈடுபட்டிருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
மேலும், வடகொரிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள், கிம் ஜூ ஏவை “மதிப்பிற்குரிய மகள்” என்று சிறப்பித்து அழைப்பதுடன், நாட்டின் உயரிய தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் “வழிகாட்டும் மாபெரும் நபர்” என்ற சிறப்புப் பட்டத்தையும் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
வடகொரியாவின் பாரம்பரிய தந்தை ஆதிக்க சமூக அமைப்பில், ஒரு பெண்ணை தலைமை வாரிசாக ஏற்றுக்கொள்வது சவாலாக அமையக்கூடும் என்பதால், அந்த எதிர்ப்புகளை முன்கூட்டியே சமாளிக்கவே கிம் ஜூ ஏவை இளம் வயதிலேயே மக்களிடையே அறிமுகப்படுத்தி, அரசியல் களத்தில் மெதுவாக முன்னிறுத்தும் முயற்சி நடைபெற்று வருவதாக தென் கொரியா கருதுகிறது.