தி கனடியன் பிரஸ்
ஜூன் 12, 2026
டொராண்டோ: கனடாவின் டொராண்டோ நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 18 வயது இளைஞனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான சோதனையின் போது, டொராண்டோ காவல்துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்து, முக்கிய சந்தேக ந நபரைத் தேடும் பணி வெள்ளிக்கிழமை தீவிரமடைந்தது.
சோதனையின் போது நடந்த துயரம்
கடந்த மார்ச் மாதம் அமெரிக்க தூதரகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு உட்பட பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதன் ஒரு பகுதியாக, வியாழக்கிழமையன்று ‘மார்த்தா ஈட்டன் வே’ (Martha Eaton Way) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது தளத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், காவல்துறை அதிகாரி மார்க் பினிசோட்டோ (Const. Marc Pinizzotto) படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இந்த மோதலில் பலமுறை துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில், 19 வயதுடைய நிக்கோலஸ் பென்னட் (Nicholas Bennett) என்ற மற்றொரு சந்தேக நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது முதற்கட்ட கொலைக் குற்றம் (First-degree murder) சுமத்தப்பட்டுள்ளது. மேலும், மார்ச் மாத சம்பவங்கள் தொடர்பாக அவர் மீது துப்பாக்கிச் சட்டம் சார்ந்த வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேடப்படும் முக்கிய நபர்
இந்த வழக்கில் தொடர்புடைய 19 வயதுடைய ஜாரா ஜாபி (Zara Jabbi) என்ற இரண்டாவது சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக உள்ளார். தூதரகத் துப்பாக்கிச் சூட்டில் தேடப்படும் இவர், ஆபத்தான ஆயுதங்களை வைத்திருக்கலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
18 வயது இளைஞன் கைது
நீதிமன்ற ஆவணங்களின்படி, அமெரிக்க தூதரகத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 18 வயதுடைய ஷெல்டன் டிரேசி-ஸ்டீவர்ட் (Sheldon Tracy-Stewart) என்ற இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட ஒரு தூதரக வளாகத்தின் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியதாகவும், அங்குள்ள அதிகாரிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவரிடமிருந்தும் பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மாண்ட அதிகாரி பினிசோட்டோவின் மரணத்திற்கு வழிவகுத்த அதே சோதனையின் போதுதான் இந்த கைதும் நடைபெற்றதா என்பது குறித்து காவல்துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக விளக்கவில்லை. எனினும், இதுகுறித்த கூடுதல் தகவல்கள் வரும் நாட்களில் வெளியிடப்படும் என காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கனடா முழுவதும் அஞ்சலி
மறைந்த 43 வயதான அதிகாரி மார்க் பினிசோட்டோவின் உடலுக்கு நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அவரது நினைவாக டொராண்டோவின் புகழ்பெற்ற ‘சிஎன் டவர்’ (CN Tower) விளக்குகள் அணைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
கனடா பிரதமர் மார்க் கார்னி, ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்டு மற்றும் டொராண்டோ மேயர் ஒலிவியா சௌ உள்ளிட்ட பல தலைவர்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்புதான், வடக்கு ஒன்டாரியோ பகுதியில் மற்றொரு காவல்துறை அதிகாரி தருண் பாலி (Tarun Bali) வாகன விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் கனடா காவல் துறையினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது