தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அருள்நிதி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘டிமான்டி காலனி 3 ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தயாராகி வரும் ‘டிமான்டி காலனி 3’ படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், ஹொலிவுட் நடிகர் ஆன்ட்டி ஜாஸ் கெலைனன், குரு சோமசுந்தரம் ,ஜி. எம். குமார், முத்துக்குமார், ஸ்ரீகுமார், மீனாட்சி கோவிந்தராஜன், கதிர் , ஆஷிக் ஹுசைன், சர்ஜனோ காலித், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் தயாரித்திருக்கிறார்.
விறுவிறுப்பாக பல கட்டங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் மே மாதம் திரையிடப்படுவதற்கான திட்டமிடலில் படக்குழுவினர் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதனிடையே அஜய் ஞானமுத்து – அருள்நிதி- பிரியா பவானி சங்கர் ,- சாம் சி எஸ் – கூட்டணியில் உருவான ‘டிமான்டி காலனி’ படத்தின் முதல் இரண்டு பாகங்களும் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியைப் பெற்றதால்… இப்படத்தின் மூன்றாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.