யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 02 ஆம் நாள் அகழ்வுகள் நேற்று (28) நடைபெற்றது.
நேற்று எலும்புக்கூடுகள் எவையும் அடையாளம் காணப்படவில்லை, கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இரண்டாம் கட்ட அகழ்வுடன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த அகழ்வு நடவடிக்கை தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
நேற்றைய அகழ்வு நடவடிக்கை பணிகள் யாழ்ப்பாண நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
கடந்த 27 ஆம் திகதி ஆரம்பமான மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளுக்கான பாதீடு நீதி அமைச்சால் அங்கீகரிக்கப்பட்டு அதற்கான நிதி யாழ். மேல் நீதிமன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடைப்படையில் மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கை 56 நாட்களுக்கு முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இரண்டு வாரகால அடிப்படையில் மூன்றாம் கட்ட அகழ்வு முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டு இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கை முடிவில், மொத்தம் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
அவற்றுள் 239 எலும்புக்கூடுகள் முழுமையாகத் தோண்டி எடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்படுள்ளது.