யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளை முற்றாக நிராகரித்து, சர்வதேச கண்காணிப்புடன் கூடிய நீதியை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் செம்மணியில் மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் இந்தப் போராட்டத்துக்கான அவசர அழைப்பை விடுத்துள்ளது.
இன்று பிற்பகல் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகப் பிரதானிகள் செம்மணி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிட வருகை தரவுள்ள நிலையிலேயே, அதற்கு முன்னதாகப் பிற்பகல் 2 மணிக்கு இந்த மக்கள் போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் அமைப்பால் வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டியில் பின்வரும் பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சர்வதேசப் பங்கேற்பு: செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு மற்றும் தடயவியல் விசாரணைகளுக்குச் சர்வதேசத் தரப்பினரின் நேரடிப் பங்கேற்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
உள்நாட்டுப் பொறிமுறை நிராகரிப்பு: பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாக ஏமாற்றத்தையே அளித்து வரும் இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறைகள் முற்றாக நிராகரிக்கப்படுகின்றன.
சர்வதேச நீதிக்கான கோரிக்கை: மனிதப் புதைகுழிகளுக்கும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் சர்வதேசப் பொறிமுறையூடான நம்பகமான நீதியே பெற்றுத்தரப்பட வேண்டும்.
“செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட இலங்கையின் நீதி அமைச்சர் வருகை தரும் நிலையில்…” என்ற தலைப்பின் கீழ், செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித என்புக் கூடுகளின் புகைப்படங்களைத் தாங்கி இந்த அழைப்புச் சுவரொட்டி வெளியாகியுள்ளது.
அதன்படி, இன்று 19.06.2026 வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குச் செம்மணி அகழ்வாய்வுத் தளம் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் இந்த மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
நீதி அமைச்சரின் வருகையின் போது தமிழ் மக்களின் உண்மையான நிலைப்பாட்டையும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மீதான அதிருப்தியையும் வெளிப்படுத்தும் நோக்கில் உறவினர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்களை இந்தப் போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.