சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவின் உத்தரவுக்கு இணங்கத் தவறினால், நாடாளுமன்ற சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு இன்று சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சாணக்கியன் எம்.பிக்கும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் நபர்களிடம் அமைச்சர் லஞ்சம் வாங்குவதாக சாணக்கியன் எம்.பி குற்றம் சுமத்தினார்.
இந்தச் சாடலை நிராகரித்த அமைச்சர், தனிப்பட்ட குரோதம் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகத் தெரிவித்தார்.
அமைச்சரின் பதிலுக்கு மீண்டும் விளக்கமளிக்க சாணக்கியன் எம்.பி முற்பட்டபோது, சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்க மறுத்தார். இதனால் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சபாநாயகருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த அமளிதுமளிக்கு மத்தியில், சபாநாயகர் தனது உத்தரவை மீறினால் சபையிலிருந்து வெளியேற்றப்படுவீர்கள் என சாணக்கியன் எம்.பிக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.