கிரீன்லாந்துக்கு கனடிய ராணுவ வீரர்களை அனுப்புவதற்கு பிரதமர் மார்க் கார்னி திட்டமிட்டுள்ளார்.
கிரீன்லாந்தை வாங்குவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வர்த்தகப் போர் மிரட்டலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்த முடிவு அமைந்துள்ளது.
நேட்டோ (NATO) நட்பு நாடுகளுடன் இணைந்து கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்யக் கனடியப் படைகளை அனுப்பும் இந்தத் திட்டம், அமெரிக்காவுடனான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னாட்சி பெற்ற டேனிஷ் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் நாடுகள் மீது ட்ரம்ப் கடும் வரிகளை அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மார்க் கார்னி, ட்ரம்பின் இந்த நடவடிக்கையைக் “கடுமையான பதற்றம்” (Escalation) என்று வர்ணித்துள்ளார்.
கிரீன்லாந்தில் ஏற்கனவே இருக்கும் கனேடிய விமானப்படை வீரர்களுடன், கூடுதலாகத் தரைப்படை வீரர்களையும் அனுப்பி நேட்டோவின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு, பிரதமர் மார்க் கார்னி ஆலோசித்து வருகிறார்.
கிரீன்லாந்தின் எதிர்காலத்தை அந்த மக்களும் டென்மார்க்கும் மட்டுமே தீர்மானிக்க முடியும். வெளியார் யாரும் தலையிட முடியாது,” என்று கார்னி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.