முதிய பெண் ஒருவரையும் அவரது பேரக் குழந்தையையும் இலக்கு வைத்து, கவனத்தைத் திசை திருப்பி நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொள்ளைச் சம்பவம் குறித்த விசாரணையைத் தொடர்ந்து டொராண்டோ காவல்துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர்.
கடந்த 2026 மே 18 அன்று, பாப்ஸ்டாஃப் அவென்யூ (Falstaff Avenue) மற்றும் கல்ஃபோர்ட் ரோட் (Culford Road) பகுதிக்கு அருகில் அந்த முதிய பெண்ணும் குழந்தையும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு ஆண் அக்குழந்தையை ஒரு வேன் (Van) நோக்கி நயமாக அழைத்துச் சென்றதாகவும், அதே நேரத்தில் ஒரு பெண் அந்த முதிய பெண்ணுடன் பேச்சுக் கொடுத்து அவரது கவனத்தைத் திசை திருப்பியதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திசைதிருப்பலைப் பயன்படுத்தி, சந்தேக நபர்கள் பாதிக்கப்பட்டவர்களின் நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பி ஓடியுள்ளதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.
12 ஆம் பிரிவு முதன்மைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் (12 Division Major Crime Unit) விசாரணையைத் தொடர்ந்து, டொராண்டோவைச் சேர்ந்த கொன்ஸ்டான்டின் போரும்பிடா (Constantin Porumbita – 41) மற்றும் பியான்கா மிட்ரான் (Bianca Mitran – 41) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவர் மீதும் பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
-
கொள்ளையடித்தல் (Robbery)
-
குற்றவியல் கும்பல் ஒன்றில் பங்கேற்றமை அல்லது அதற்குப் பங்களித்தமை (Participating in or contributing to a criminal organization)
இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் இருக்கக்கூடும் என நம்பும் புலனாய்வாளர்கள், சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் டொராண்டோ காவல்துறையை 416-808-1200 என்ற எண்ணிலோ அல்லது ‘க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Crime Stoppers) அமைப்பை 416-222-TIPS (8477) என்ற எண்ணிலோ ரகசியமாகத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகளும் புகார்களும் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் வரை நிரபராதிகளாகவே கருதப்படுவர்