ஈரானில் கறுப்பு மழை பெய்த நிலையில், கறுப்பு மழையும் அதனுடன் கலந்து வரும் அமிலமும் மக்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
கடந்த திங்கள் கிழமை, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் எண்ணெய் சேகரிப்பு மையமுமு் தாக்கப்பட்டதை அடுத்து, அவை தீப்பிடித்து எரியத் தொடங்கின. இதனால், தலைநகரை கறுப்புப் புகை மூடியது. இதையடுத்து பெய்த மழை, கருப்பு நிறுத்தில் இருந்துள்ளது.
காற்றில் கருந்துகள்கள் கலந்துள்ளதாலும் கறுப்பு மழையுடன் அமிலம் கலந்து இருப்பதாலும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று ஈரான் அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தெஹ்ரானில் உள்ள தனது அலுவலகத்துடன் இணைந்து உலக சுகாதார மையம் ஆய்வு மேற்கொண்டது. இதையடுத்து ஜெனீவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மியர்,
கறுப்பு மழையும் அதனுடன் வரும் அமில மழையும் மக்களுக்கு ஆபத்தானது. குறிப்பாக சுவாச பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஈரான் மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளதற்கு உலக சுகாதார மையம் ஆதரவு அளிக்கிறது.
தாக்குதல்களால் எண்ணெய் சேமிப்பு நிலையங்களிலும் சுத்திகரிப்பு நிலையங்களிலும் தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளதால், காற்றின் தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விஷத்தன்மை நிறைந்த ஹைட்ரோகார்பன்கள், சல்பர் ஆக்சைடுகள் மற்றும் நைட்ரஜன் சேர்மங்கள் அதிக அளவில் காற்றில் வெளியேறியுள்ளன என தெரிவித்துள்ளார்.