சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட சில கட்சியினர் பதிவிடும் கருத்துக்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்வினைகள் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிப்பதாக ஓய்வுபெற்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளித்தாலும், தேர்தல் முடிவுகளை முன்வைத்து இளம் தலைமுறையினரும் பெண்களும் காட்டி வரும் தீவிரமான மனநிலை ஆபத்தானது என்று எச்சரித்தார்.
குறிப்பாக, “தனது தலைவர் வெற்றி பெறாவிட்டால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு நானும் இறந்துவிடுவேன்” என்று ஒரு பெண்மணி பேசியிருப்பது போன்ற பதிவுகள் சமூகத்தில் நிலவும் விபரீதப் போக்கைக் காட்டுவதாக அவர் வருத்தம் தெரிவித்தார். ஜனநாயகத்தில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்றும், பெரிய தலைவர்களே தேர்தலில் தோற்றுப்போன வரலாறுகள் உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, தங்களது தொண்டர்களும் இளம் தலைமுறையினரும் எந்தவித விபரீத முடிவுகளையும் எடுக்காமல் இருக்க, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், சினிமா நடிகர்களும் உடனடியாக அறிக்கை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே இத்தகைய சமூகக் கடமையை ஆற்றுவது மிக அவசியம் என்றும் நீதிபதி கிருபாகரன் கேட்டுக்கொண்டார்.
#JusticeKirubakaran #TNElection2026 #ElectionResults #SocialMediaTrends #PublicAwareness #MentalHealth #May4 #TamilPolitics #ChennaiNews #BreakingNews #DemocraticValues #StaySafe #PoliticalUnity #AdviceForYouth #TNAssemblyElection