எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தி ஆட்சியை தக்க வைக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறது. அதனை இல்லாதொழிக்க அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான மாற்று வழியொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம் சி. தொலவத்த தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய அரசாங்கம் சிங்களப் புத்தாண்டுக்கான சுபநேரங்களை மாற்றியமைத்ததோடு, வெசாக் கொண்டாட்டங்களிலும் மாற்றங்களை உட்புகுத்தியுள்ளது. அத்துடன் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் நினைவுகூரும் விடயத்திலும் ஆர்வமின்மையை காட்டி வருகிறது. அது குறித்த நிகழ்வு நடைபெறுமா இல்லையா என்ற நிலைப்பாடு தோன்றியுள்ளது.
கடந்த காலங்களில் தாம் நாட்டை ஒப்படைக்கும் போது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 224 ரூபாவாக காணப்பட்டது. கடந்த காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டது. இருப்பினும் நாம் மக்களுக்கு வெளிப்படையாக காணப்பட்டோம். ஆனால் இன்று 329 ரூபா வரை அதிகரித்துள்ளது. கடந்த கால ஆட்சியில் ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வருவதாக கூறி நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் வந்திருந்தால் ஏன் டொலரின் மதிப்பு குறையவில்லை.
மேலும் தற்போதைய அரசாங்கம் அபிவிருத்திப் பணிகளில் தோல்வியடைந்துள்ளோடு, மக்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யவும் தவறியுள்ளனர். எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்தி ஆட்சியை தக்க வைக்க அரசாங்கம் சூழ்ச்சி செய்கிறது. அதளை முறியடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான மாற்று வழியொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். அதாவது உண்மைகளை குறித்து ஆராயும் அமைப்பாக ஒரு பொதுவான எதிர்க்கட்சியாக அனைத்து தலைவர்களுடனும் பேசி நல்ல தீர்மானமொன்றை எடுக்கவுள்ளோம்.
அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் உண்மைகளை புரிந்து கொண்டு மக்கள் தமது கருத்துக்களை தைரியமாக முன்வைக்க வேண்டும். மக்களின் பணத்தில் இதுவரை 2.5 ரூபாய் வீணடிக்கப்பட்டது. எனவே பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம். ஜனநாயகத்தை நசுக்கும் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.