ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவற்படையுடன் (IRGC) தொடர்புடையதாகக் கூறப்படும் முன்னாள் ஈரானிய அதிகாரி ஒருவருக்கு கனடாவுக்கு விஜயம் செய்ய விசா வழங்கப்பட்டமைக்குத் தான் பொறுப்பேற்பதாக கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சர்லீனா தியாப் (Lena Diab) தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தத் தீர்மானத்தில் தனக்கு நேரடித் தொடர்பு இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தச் சம்பவம் மெஹ்தி தாஜ் (Mehdi Taj) என்பவருடன் தொடர்புடையது. அவருக்குத் தற்காலிக வதிவிட விசா வழங்கப்பட்ட போதிலும், அவர் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்னரே அனுமதி மறுக்கப்பட்டது.
இது குறித்து நாடாளுமன்றக் குழுவிடம் கருத்துத் தெரிவித்த தியாப், அந்த அனுமதிச் சீட்டு சரியான நேரத்தில் ரத்து செய்யப்பட்டதாகவும், வருங்காலத்தில் குறிப்பாக சர்வதேச நிகழ்வுகளுக்கு முன்னதாக இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தை முன்னரே கையாண்டிருக்க வேண்டும் என்று குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். அதிக ஆபத்துள்ள நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் விரைவாகத் தடுக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் டெட் காலிவன் (Ted Gallivan) குறிப்பிட்டார்.
மார்க்க் கார்னி (Mark Carney) நாட்டின் குடிவரவு முறைமையைப் பாதுகாத்துப் பேசுகையில், பல கட்ட சோதனைகள் நடைமுறையில் இருப்பதாகவும், கனடாவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள IRGC உடன் தொடர்புடைய நபர்கள் நாட்டிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியினர் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இந்த விசா முதலில் எவ்வாறு அங்கீகரிக்கப்பட்டது என்பது குறித்து அதிக வெளிப்படைத்தன்மை தேவை என்றும், இந்த விவகாரம் கனடாவிலுள்ள ஈரானிய சமூகத்தினிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் எச்சரித்தனர்.
இவ்வாறான தவறுகள் இனிவரும் காலங்களில் ஏற்படுவதைத் தவிர்க்க, இந்தச் சம்பவம் குறித்து மீளாய்வு செய்து வருவதாக கூட்டாட்சி அரசாங்கம் தெரிவித்துள்ளது.