பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவா் இன்று சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த செயல்முறையின் ஒரு பகுதியாக, கணக்கீட்டு கட்டத்தின் போது கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்களை உள்ளடக்கிய வரைவு வாக்காளர் பட்டியல் 19 டிசம்பர், 2025 அன்று வெளியிடப்பட்டது.
19.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் 19.12.2025 முதல் 30.01.2026 வரையிலான காலகட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத குடிமக்கள் மற்றும் 18 வயது நிரம்பிய தகுதியுடைய வாக்காளர்கள் தங்கள் பெயரை பதிவுசெய்ய படிவம்–6ஐ நிரப்பி உறுதிமொழி படிவத்துடன் (Declaration Form) விண்ணப்பித்துள்ளனர். முன்மொழியப்பட்ட சேர்க்கைக்கு ஆட்சேபணை தெரிவிக்க அல்லது ஏற்கனவே உள்ள பதிவை நீக்க படிவம்-7ஐ சமர்ப்பித்துள்ளனர்.