குருக்கள்மடம் பகுதியில் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் இரண்டாம் நாளாக இன்றும் (31.03.2026) முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம் மக்கள் ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு நீண்ட விசாரணைகளின் பின்னர் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதவான் ரி. பிரதீபன் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் நேற்று (30.03.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டாம் நாளாகிய இன்று(31.03.2026) அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. அகழ்வு இடம்பெறும் இடத்தில் இதுவரை எந்தவித எலும்புக் கூடுகளும் மீட்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குருக்கள்மடத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமலாக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகள், பொலிஸார், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, இராணுவத்தினர், தடயவியல் பிரிவு, தொல்லியல் திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற அதிகாரர்கள் உள்ளிட்ட பலரும் அகழ்வுப் பணியில் கலந்து கொண்டுள்ளனர்.