உதவி செய்யும் போது நல்லவராகத் தெரிந்த வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் தமிழினப் பிரிவினைவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது புலம்பெயர் தமிழர்களின் பணத்தைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து, தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளித்தவரே இராமநாதன் அர்ச்சுனா என விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அப்போது அனைவருக்கும் நல்லவராகத் தெரிந்த அவர், தற்போது எதிர்க்கட்சிக் களத்தில் இணைந்த பின்னர் வேறு விதமான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
அண்மையில் தெற்கில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றிய அர்ச்சுனா, தனது வாழ்நாளில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியான தமிழீழம் உருவாக இடமளிக்கப் போவதில்லை என்றும், தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் மோதலில் ஈடுபட ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்ததாக விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.
அர்ச்சுனாவின் குறித்த கருத்துக்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபனுக்கு சிலை அமைக்கப்பட்டு, மக்கள் அவரை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துவதாகவும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.