பருத்தித்துறை நகர சபை அமர்வு, தவிசாளர் விந்சென்ட் டீ போல் டக்ளஸ் போல் தலைமையில் இன்று(30) காலை 9.00 மணியளவில் ஆரம்பமானது.
முதலில் கடந்த கூட்டத்தின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சபைக்கு அறிவிக்கப்பட்டதுடன், அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து சபை உறுப்பினர் சிவலிங்கம் பொன்னம்பலத்தால் முன்வைக்கப்பட்ட பல்வேறு முன்மொழிவுகள் விவாதிக்கப்பட்டன.
நகர சபை எல்லைக்குட்பட்ட கழிவுநீர் வாய்க்கால்களில் கழிவுநீரை மட்டும் அகற்ற வேண்டும் என்றும், பிற கழிவுப்பொருட்களை வெளியேற்றுவோருக்கு தடை விதித்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மேலும் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒதுக்கப்பட்ட விடயங்கள், மரக்கறி சந்தை துவிச்சக்கர வண்டி குத்தகை, நகரில் கேமரா கண்காணிப்பு அமைப்புக்கான கேமரா கொள்வனவு, திண்மக்கழிவகற்றல் சேவைக்கான பருத்தித்துறை பிரதேச சபையுடனான ஒப்பந்த புதுப்பிப்பு உள்ளிட்ட விடயங்களும் பரிசீலிக்கப்பட்டன.
அதேபோல், அவசர பராமரிப்பு பணிகளுக்கான பெறுகை நடைமுறைகளால் ஏற்படும் காலதாமதத்தை குறைக்கும் வகையில், தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களை நாட்கூலி அடிப்படையில் பயன்படுத்துவது தொடர்பாகவும் தீர்மானிக்கப்பட்டது.
“பிரஜாசக்தி” திட்டத்தின் கீழ் சமூக அபிவிருத்தி சபையால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி முன்மொழிவுகள், நகர சபை எல்லைக்குட்பட்ட வீட்டு திட்டங்களுக்கான கட்டிட அனுமதிகள், கோரியடி கடற்கரையில் நடமாடும் கடைகள் அமைப்பது உள்ளிட்ட விடயங்களும் அங்கீகரிக்கப்பட்டன.
மேலும் நவீன சந்தை தொகுதியில் வாடகை ஒப்பந்த பெயர் மாற்றம், பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 160 பயனாளிகளுக்கு இலவச நீர் இணைப்பு வழங்குதல், 2021 மற்றும் 2022 ஆண்டுகளில் சேகரிக்கப்பட்ட முத்திரை தீர்வு நிதியில் இருந்து பொருட்கள் கொள்வனவு செய்வதற்கான அனுமதி ஆகியவையும் வழங்கப்பட்டன.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பன்னங்கண்டி வீதி மற்றும் கண்ணை அம்மன் கோவில் வீதி அபிவிருத்தி பணிகளுக்கான ஒதுக்கீடு மற்றும் தழுவல் அனுமதியும் வழங்கப்பட்டது.
இதேவேளை, தேசிய கணக்கு ஆய்வு திணைக்களத்தின் அறிக்கையை தவிசாளர் சபைக்கு வாசித்தார். அதில், நிறுவனத்தில் பல மில்லியன் ரூபாய் அளவிலான நிதி கையாளல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.