தொலைத்தொடர்பு மற்றும் இணையத்தள மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கைகளில் சீனா உறுதியுடன் செயல்பட்டு வருவதுடன், அதனை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையுடன் சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தயாராக இருப்பதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் சட்ட அமுலாக்க அமைப்புகள் அண்மையில் இணையவழி மோசடிகளில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு சந்தேக நபர்களை கைதுசெய்திருந்த அதேவேளை, குறித்த நபர்களில் சீனப் பிரஜைகளும் அடங்குவது குறித்து சீனா கவனித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றச்செயல்கள் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதுடன், சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை கடுமையாக எதிர்கொள்வதற்கான இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய உலகில் தொலைத்தொடர்பு மற்றும் இணைய வழி மோசடிகள் வேகமாக வளர்ந்து பல நாடுகளுக்கு பரவி வரும் நிலையில், அது ஒரு உலகளாவிய பிரச்சினையாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், சீனா, மியான்மர், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து மோசடிகளை எதிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும், பல குற்றக் குழுக்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த நடவடிக்கைகளின் பின்னர் சில குற்றவாளி குழுக்கள் தென்கிழக்காசியாவின் பிற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் மேம்பட்ட தொலைத்தொடர்பு அமைப்பு, சாதகமான புவியியல் அமைவு, மற்றும் விசா விதிமுறைகளின் தளர்வு போன்ற காரணங்களால் சில மோசடி கும்பல்கள் இலங்கையை தங்களின் செயல்பாட்டு மையமாக பயன்படுத்தி வருவதாக சீனத் தரப்பு தெரிவித்துள்ளது. இதன் விளைவாக சீனப் பிரஜைகளை குறிவைத்து நடத்தப்படும் மோசடிகள் அண்மைக்காலங்களில் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு, சீன அரசு இலங்கை சட்ட அமுலாக்க அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து, இணைந்த விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.
2024 ஆம் ஆண்டில் மோசடிகளில் ஈடுபட்டிருந்த பல சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் அவர்களை கட்டம் கட்டமாக சீனா நோக்கி நாடுகடத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சீனா மற்றும் இலங்கை நீண்டகால நட்பு உறவை கொண்ட நாடுகளாக இருப்பதுடன், இரு நாடுகளும் பரஸ்பரம் ஆதரவு வழங்கி வருகின்றன.
எதிர்காலத்திலும் எல்லைத் தாண்டிய குற்றச்செயல்களை, குறிப்பாக தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளை எதிர்க்க இணைந்த நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தத் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
இந்த ஒத்துழைப்பு முயற்சிகள், இரு நாடுகளின் மக்களின் பாதுகாப்பையும் சொத்துக்களையும் காக்கும் விதமாகவும், இருநாட்டு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் சூழலை உருவாக்கும் வகையிலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது என சீனத்தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.