கனடாவின் ஸ்காபரோ பகுதியில் திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மற்றொருவர் அவசர மருத்துவப் பிரிவினரால் (Emergency run) தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திங்கட்கிழமை பிற்பகல் 3:20 மணியளவில், விக்டோரியா பார்க் அவென்யூ (Victoria Park Avenue) மற்றும் ஹைவே 401 (Highway 401) பகுதிக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருந்த ஒரு நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாகப் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் அதற்கு அருகிலுள்ள விக்டோரியா பார்க் மற்றும் ஷெப்பர்ட் அவென்யூ (Sheppard Avenue) சந்திப்பிற்கு அருகில் கண்டறியப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். உடற்காயங்களுக்கு உள்ளாகியிருந்த அந்த நபர், உடனடியாகப் பலத்த பாதுகாப்புடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும், அவரது காயங்களின் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
பாதிக்கப்பட்ட இவ்விருவரும் ஒருவரையொருவர் சுட்டுக்கொண்டனரா என்பதைப் பொலிஸாரால் உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும், இந்த இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுக்கும் இடையே நேரடித் தொடர்பு உள்ளதை டொராண்டோ பொலிஸின் கடமைநேரப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ஜொனாதன் ரோஸ் (Jonathan Rose) உறுதிப்படுத்தியுள்ளார்.
திங்கட்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களைச் சந்தித்து விபரங்களை வெளியிட்ட இன்ஸ்பெக்டர் ஜொனாதன் ரோஸ், “இந்த விபரீதச் சம்பவம் குறித்த விசாரணைகளுக்காகத் தேவையான அனைத்துப் பொலிஸ் வளங்களையும் நாங்கள் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்த விசாரணைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு வேறு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, இந்த ஆண்டில் டொராண்டோ நகரில் பதிவான 17 ஆவது மனிதக் கொலைச் (Homicide) சம்பவமாகக் குறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.