வின்சர் (Windsor) நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்றிலிருந்து சுமார் 30,000 டாலர் மதிப்பிலான 30 அரிய வகை (Exotic) பறவைகள் திருடப்பட்ட சம்பவத்தில், வின்சர் காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர் என்பதுடன் தலைமறைவாக உள்ள இரு சந்தேகநபர்களைத் தேடி வருகின்றனர்.
ஜூன் 22ஆம் தேதி மாலை வேளையில், முகமூடி அணிந்த மூன்று சந்தேகநபர்கள் யுனிவர்சிட்டி அவென்யூ ஈஸ்ட் (University Avenue East) பகுதியின் 700ஆவது கட்டடத் தொகுதியில் உள்ள பறவைக் கூண்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தின் போது ஒரு பறவை கொல்லப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், சாதம்-கென்ட் (Chatham-Kent) காவல்துறையின் உதவியோடு, சாதம் பகுதியில் வசிக்கும் 29 வயதுடைய ஹுசைன் கலாஃப் (Husien Khalaf) என்பவரைக் கைது செய்தனர். திருடப்பட்ட பறவைகளில் 22 பறவைகளை அதிகாரிகள் மீட்டுள்ள நிலையில், எஞ்சிய பறவைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கைது செய்யப்பட்டுள்ள ஹுசைன் கலாஃப் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
அத்துமீறி நுழைந்து $5,000-க்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களைத் திருடுதல் (Break-and-enter and theft over $5,000)
விலங்கு அல்லது பறவைக்குத் தேவையற்ற வலி, துன்பம் அல்லது காயத்தை ஏற்படுத்துதல்
குற்றச் செயலின் மூலம் பெறப்பட்ட $5,000-க்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்துக்களைத் தன்வசம் வைத்திருத்தல்
குற்றச் செயலில் ஈடுபடும் நோக்கத்துடன் முகமூடி அல்லது மாறுவேடம் அணிந்திருத்தல்
இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயதுடைய மஹ்மூத் மோ கலாஃப் (Mahmoud Moe Khalaf) என்பவரைக் கைது செய்வதற்கான பிடியாணையையும் (Arrest warrant) காவல்துறை பிறப்பித்துள்ளது. இவர் மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த தோற்றமும், சுமார் 5 அடி 5 அங்குல உயரமும், மெலிந்த உடலமைப்பும், பழுப்பு நிறக் கண்களும், சிறிய பழுப்பு நிறக் தலைமுடியும் கொண்டவர் என விவரிக்கப்பட்டுள்ளது.
மேலும், “தர்விஷ்” (Darwish) என்ற பெயரைப் பயன்படுத்தலாம் எனக் கருதப்படும் அடையாளம் தெரியாத மூன்றாவது சந்தேகநபரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தின் போது அவர் பச்சை நிற முகமூடி, சாம்பல் நிற ஹூடி (Hoodie) சட்டை, கருப்பு நிறக் காற்சட்டை (Shorts) மற்றும் கருப்பு நிற நைக் (Nike) காலணிகளை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 519-255-6700 (ext. 4350) என்ற இலக்கத்தின் ஊடாக வின்சர் காவல்துறையினரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு: சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படும் வரை நிரபராதிகளாகவே கருதப்படுவர்.