நிலக்கரி கொள்முதல் தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில், அதில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என ஜனாதிபதி அண்மையில் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்திருப்பது அந்த விசாரணையின் சுயாதீனத்தன்மையை பாதிக்கும் ஒரு முறையற்ற செயல் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை (18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாடு தற்போது மிகவும் கடினமான சமூக-பொருளாதார நெருக்கடியில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்த இக்கட்டான நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக அரசாங்கமோ அல்லது வேறு தரப்பினரோ எடுக்கும் நியாயமான முயற்சிகளுக்குத் தமது கட்சி எப்போதும் ஆதரவு வழங்கும் எனத் தெரிவித்தார்.
அந்த வகையில், மக்களின் கஷ்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில், கட்சியின் தேசிய அமைப்பாளரின் அறிவுறுத்தலின்படி, எதிர்வரும் வார இறுதி நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த கட்சியின் பிரம்மாண்ட அரசியல் பேரணிகள் அனைத்தையும் தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளதாக அவர் அறிவித்தார்.
நேற்றைய தினம் ஜனாதிபதி முதன்முறையாக நிலக்கரிப் பிரச்சினை குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போது, தனது நம்பிக்கையின்படி அங்கு எந்தத் தவறும் நடக்கவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விமர்சித்த சஞ்சீவ எதிரிமான்ன, நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவர் என்ற ரீதியில், ஒரு விசாரணை நிலுவையில் இருக்கும்போது அதன் முடிவு குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே கருத்துத் தெரிவிப்பது விசாரணையின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கும் என எச்சரித்தார்.
மேலும், நிலக்கரி ஊழல் குறித்து லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் செய்யப்படவில்லை என ஜனாதிபதி கூறியது முற்றிலும் தவறான தகவல் என்றும், தற்போதைய அரசாங்கத்தின் இந்த நிலக்கரி மோசடி தொடர்பாகப் பல தரப்பினரால் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்தப் பிரச்சினையைக் கோப் (COPE) குழுவில் விவாதிக்கலாம் என ஜனாதிபதி முன்வைத்த யோசனை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், அவ்வாறாயின் எதிர்க்கட்சிகள் நீண்டகாலமாகக் கோரி வருவது போல கோப் குழுவின் தலைவர் பதவியை முதலில் எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். “அரசாங்கம் முன்னர் கூறியது போல ஒரு வருடம் கழித்து எதிர்க்கட்சிக்குத் தலைவர் பதவியைத் தருவதாகச் சொல்லாமல், இப்போது நிலக்கரி ஊழல் பற்றிப் பேச முன்வருகிறீர்கள் என்றால், உடனடியாக அந்தப் பொறுப்பை எதிர்க்கட்சியிடம் ஒப்படையுங்கள்” என அவர் சவால் விடுத்தார்.
இந்த நிலக்கரி விவகாரத்தில் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு எதிராகப் பாரதூரமான குற்றச்சாட்டுகள் இருப்பதாகவும், அவசர கொள்முதல்களை மேற்கொள்வதற்காகவே அரசாங்கத்தினால் செயற்கையான நிலக்கரி தட்டுப்பாடு உருவாக்கப்பட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
டெண்டர் வழங்கப்படுவதற்கு முன்னரே அமைச்சர் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களை நேரில் சந்தித்துப் பேசியுள்ளமை சாதாரணமான விடயமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது அரசாங்கத்தில் தவறு செய்பவர்களுக்குத் தண்டனை உண்டு என ஜனாதிபதி காட்டும் பிம்பம் போலியானது எனச் சாடிய அவர், அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள், அரசியல் அலுவலகங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் முறையற்ற நடத்தைகள் குறித்து ஜனாதிபதி இதுவரை எந்தவொரு ஒழுங்குமுறை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு தவறான அரசியல் தகவல்களைச் சமூகத்திற்கு வழங்கியது போல, தற்போதும் ஜனாதிபதி என்ற பதவியில் இருந்து கொண்டு இத்தகைய பொய்களை மீண்டும் கூற வேண்டாம் என சஞ்சீவ எதிரிமான்ன இதன்போது வலியுறுத்தினார்.