றிச்மண்ட் ஹில்லில் உள்ள வர்த்தக மையம் (shopping centre) ஒன்றில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இரகசிய படப்பிடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து, றிச்மண்ட் ஹில்லைச் சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் மீது யோர்க் பிராந்திய பொலிஸார் (York Regional Police) குற்றம் சுமத்தியுள்ளனர்.
வாடிக்கையாளர்களை இரகசியமாகப் படம் பிடித்ததாகக் கூறப்படும் முந்தைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சந்தேகநபரை அங்குள்ள நஷ்டத் தடுப்புப் பணியாளர்கள் (loss prevention staff) அடையாளம் கண்டுகொண்டதை அடுத்து, ஜூன் 9 அன்று ‘யோங் வீதி’ (Yonge Street) மற்றும் ‘கார்வில் வீதிக்கு’ (Carville Road) அருகில் உள்ள ஒரு கடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைத்தொலைபேசி ஒன்றை வைத்திருந்தவாறு அந்த நபர் கடையில் இருந்த இரண்டு பெண்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளதாகப் புலனாய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பின்னர் அவர் அந்தப் பெண்களில் ஒருவருக்குப் பின்னால் குனிந்து அமர்ந்து, அவரது பாவாடைக்குக் கீழே இரகசியமாகப் படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னர் சிறிது நேரத்திலேயே அங்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரைக் கைது செய்தனர்.
றிச்மண்ட் ஹில்லைச் சேர்ந்த 30 வயதுடைய நிக்கோலஸ் ரோசின்ஸ்கி (Nicholas Rossinski) என்பவர் மீது பின்வரும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:
-
இரகசிய படப்பிடிப்பு (Voyeurism)
-
குற்றவியல் துன்புறுத்தல் (Criminal Harassment)
பாதிக்கப்பட்ட மேலும் சில நபர்கள் இருக்கக்கூடும் என புலனாய்வாளர்கள் நம்புவதால், குற்றம் சாட்டப்பட்டவரின் புகைப்படத்தைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான விபரங்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் ‘யோர்க் பிராந்திய பொலிஸ் #2 மாவட்ட குற்றப் புலனாய்வுப் பணியகத்தை’ 1-866-876-5423 (ext. 7241) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்தக் குற்றச்சாட்டுகள் மற்றும் அச்சுறுத்தல்கள் நீதிமன்றத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியாகவே கருதப்படுவார்