இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு புனித பௌத்த யாத்திரை உட்பட ஆன்மீகக் குழுக்களாகப் பயணிக்கும் யாத்திரிகர்களுக்கான இலவச விசா வழங்கும் முறைமை மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளதாகக் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையர்கள் அனைவருக்கும் உரிய நேரத்திலும் இலகுவான முறையிலும் விசாக்களை வழங்குவதை எமது நிலையான கொள்கையாகக் கொண்டுள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம், யாத்திரிகர்களுக்கான விசா நடைமுறைகள் தொடர்பில் எழுப்பப்பட்டுள்ள ஊடகக் கேள்விகளுக்குத் தெளிவுபடுத்தி ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்தியாவிலுள்ள புனித பௌத்த யாத்திரைத் தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்குப் பயணிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்குப் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான குழுக்களாகப் பயணிக்கும் பட்சத்தில் இலவசமாக விசாக்கள் வழங்கப்பட்டு வந்தன. சேவை வழங்குனரில் ஏற்பட்ட இடைக்கால மாற்றத்தினால் தற்காலிகமாகத் தடைப்பட்டிருந்த இச்செயற்பாடு, புதிய மூன்றாம் தரப்புச் சேவை வழங்குநர் கடந்த ஜூலை 7 ஆம் திகதி முதல் கடமைகளைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
முன்னர் காணப்பட்ட நடைமுறையைப் போலவே, இலவச விசா வசதியைப் பெற விரும்பும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட யாத்திரிக் குழுக்களின் விண்ணப்பங்கள், இலங்கை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் முறைப்படி உறுதிப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இந்திய அரசாங்கத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, 12 வயது முதல் 70 வயது வரையிலான விண்ணப்பதாரர்கள் அனைவரும் தமது உயிரியல் அடையாளங்களை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். குழுவாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பில் அமைந்துள்ள இந்திய கொன்சியூலர் சேவை விண்ணப்ப மையங்களுக்கு நேரில் சென்று உயிரியல் அடையாளங்களைப் பதிவு செய்ய வேண்டும். இது பயணிகள் இந்தியாவில் இறங்கும்போது குடிவரவு நடைமுறைகளை எளிதாகவும் சிரமமின்றியும் கடந்துசெல்ல உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.ஏ.சி. மையங்களுக்கு வருகை தரும் முதியவர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் காத்திருக்கும் நேரத்தைச் சாத்தியமான அளவில் குறைப்பதற்காக விசேட நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட நடைமுறைகளின் கீழ் விண்ணப்பிக்கும் இலங்கை யாத்திரிகர்களுக்கு இந்திய அரசு எவ்வித விசா கட்டணத்தையும் அறவிடுவதில்லை. இருப்பினும், ஐ.சி.ஏ.சி. சேவைக்கான கட்டணமாக விண்ணப்பதாரி ஒருவர் இலங்கை 1,855 ரூபா மாத்திரம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.