தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றமுறையான அச்சுறுத்தல் மற்றும் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட அம்பாறை மேல் நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜெயலக்ஷி டி. சில்வாவை விடுவிக்குமாறு கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
B/940/22 வழக்கு தொடர்பாக, பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையில், சந்தேகநபருக்கு தண்டனைச் சட்டக்கோவையின் 486 மற்றும் 344 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தியபோது, பெரியநீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் மேலதிக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதில், சட்டமா அதிபர் ஆலோசனையின் அடிப்படையில் சந்தேகநபரை விடுவிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், சில குறைபாடுகள் இருப்பதால் நீதிமன்றம் பொலிஸாருக்கு இறுதி அறிக்கையை திருத்தி சமர்ப்பிக்க உத்தரவு வழங்கியுள்ளது.
நீதிமன்றம் வழக்கை 2026 மார்ச் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது, அடுத்த வழக்குத் தவணையில் பாதிக்கப்பட்ட தரப்பின் முன்னிலை மற்றும் சட்டவிவரங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.