சனிக்கிழமை நள்ளிரவு மிசிசாக்காவிலுள்ள ஹுரோன்டாரியோ வீதிக்கு (Hurontario Street) அருகில் தி குவீன்ஸ்வேயைக் (The Queensway) கடக்க முயன்ற 20 வயதுப் பெண் ஒருவர், வாகனம் மோதியதில் உயிரிழந்துள்ளார்.
குறிப்பிட்ட பெண் பாதசாரி கடவை அல்லாத வீதியின் நடுப்பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது கீழே விழுந்ததாகவும், அப்போது அவ்வழியாக வந்த செடான் (sedan) ரக வாகனம் ஒன்று அவர் மீது மோதியதாகவும் பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆபத்தான காயங்களுடன் அவர் உடனடியாக ரொறன்ரோ அதிதீவிர சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்தார்.
விபத்து நடந்தவுடன் சாரதி ஆரம்பத்தில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றபோதிலும், சுமார் எட்டு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் திரும்பி வந்துள்ளதாகப் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். உடல்காயத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்தில் தங்கியிருக்கத் தவறிய குற்றச்சாட்டின் கீழ் முதலில் அந்தச் சாரதி மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அக்குற்றம் மரணத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்தில் தங்கியிருக்கத் தவறிய குற்றச்சாட்டாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பொலிஸார் பின்னர் அந்தச் சாரதியை நிபந்தனையின்றி விடுவித்தனர்.
சாரதி ஆரம்பத்தில் சம்பவ இடத்திலிருந்து ஏன் தப்பிச் சென்றார் என்றும், அங்கு ஏதேனும் குற்றவியல் குற்றம் நடந்துள்ளதா என்றும் கண்டறிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச்சம்பவத்தைக் கண்ட சாட்சிகள் எவரேனும் இருப்பின் பொலிஸாரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.