கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா (B.C.) மாகாணத்தில், மாணவர் ஒருவருடன் முறையற்ற மின்னஞ்சல்களைப் பரிமாறிக்கொண்டதுடன், அவர் பாடசாலையை விட்டு வெளியேறிய பின்னர் அவரை முத்தமிட்டதை ஒப்புக்கொண்ட முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு, 10 ஆண்டுகளுக்குக் கற்பித்தல் பணிகளில் ஈடுபட மாகாண ஒழுங்குமுறை அமைப்பினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் இயன் கோலெட் (Robert Ian Collett) என்ற இந்த ஆசிரியர், தான் பணிபுரிந்த தனியார் பாடசாலையிலிருந்து கடந்த 2023 டிசம்பரில் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர், 2024 மே மாதத்தில் கல்வி அமைச்சின் சான்றிதழ் தேவைப்படும் எந்தவொரு கற்பித்தல் பணியிலும் ஈடுபட மாட்டேன் என அவர் உறுதியளிப்பில் கையெழுத்திட்டிருந்தார். அத்துடன், கட்டணம் செலுத்தாததன் காரணமாக 2025 நவம்பரில் அவரது கற்பித்தல் சான்றிதழும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆசிரியர் ஒழுங்குமுறைக்கான பிரிட்டிஷ் கொலம்பியா ஆணையாளருடன் ஜூன் மாதம் எட்டப்பட்ட இணக்கப்பாட்டு உடன்படிக்கையின் (consent resolution agreement) அடிப்படையில், கோலெட் தனது தவறான நடத்தையை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்தே, அவர் மீண்டும் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பதற்கு இந்த புதிய 10 ஆண்டு காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற சம்பவம்: அந்த உடன்படிக்கையின்படி, கோலெட் தனது பாடசாலையின் 12ஆம் தர மாணவர் ஒருவருடன், ஆரம்பத்தில் பாடசாலை விடயங்கள் சார்ந்து மின்னஞ்சல்களைப் பரிமாறத் தொடங்கியுள்ளார். பின்னர், அது படிப்படியாக “காதல் மற்றும் நெருக்கமான வார்த்தைகள்” அடங்கிய செய்திகளாக மாறியுள்ளது.
அந்த மாணவர் பாடசாலையை முடித்து சித்தியடைந்த (graduated) பின்னர், அவர்கள் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல்களில் “பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள்” காணப்பட்டுள்ளன.
மாணவர் வெளியேறிய ஒரு மாதத்திற்குள், கோலெட்டும் அந்த மாணவரும் ஒரு உணவகத்தில் சந்தித்து தனிப்பட்ட விபரங்களைப் பேசியுள்ளனர். பின்னர் ஒரு பூங்காவில் சந்தித்த போது, கோலெட் அந்த மாணவரைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார் என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பிற்குப் பிறகு, அந்த மாணவர் கோலெட்டிற்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி, இனிமேல் தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், சில நாட்களுக்குப் பிறகு அந்த ஆசிரியர் அம்மாணவருக்கு ஒரு “பிரியாவிடை கவிதை” (good-bye poem) ஒன்றை அனுப்பியுள்ளார்.
“கோலெட் ஒரு ஆசிரியராகப் பேண வேண்டிய முறையான எல்லைகளைக் கடைப்பிடிப்பதில் கடுமையான தோல்வியைக் கண்டுள்ளார். அத்துடன், அந்த மாணவரின் உணர்வுபூர்வமான பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை ஆபத்திற்குள்ளாக்கும் வகையிலான நடத்தையில் அவர் ஈடுபட்டுள்ளார்” என ஆணையாளர் தனது முடிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.