மஹர சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்தத் தவறியமை மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளுக்குப் பொறுப்பேற்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகப் பதவி விலக வேண்டும். இத்தகைய முக்கிய துறைகளுக்குத் தகுதியான நபர்களை நியமிக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு உள்ளது என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நேற்று மாலை மஹர சிறைச்சாலையில் ஆரம்பமான அமைதியின்மை இதுவரை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. இதில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த பலர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சூழ்நிலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக அரசாங்கம் கூறினாலும், சிறைச்சாலையினுள் தீப்பற்றி எரிவதும் புகை மூட்டம் எழுவதும் தொடர்கிறது. கைதிகளின் உறவினர்கள் சிறைக்கு வெளியே திரண்டு கவலையும் எதிர்ப்பும் வெளியிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பலர் உயிரிழந்தபோதும், சிறைச்சாலைகள் மறுசீரமைப்புக்கு பொறுப்பான அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டார். அவருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆராயாமல் தோற்கடித்தனர். ஒரு சிறைச்சாலையைக் கூட சரிவரக் கட்டுப்படுத்த முடியாத அமைச்சர்களே இந்த அரசாங்கத்தில் உள்ளனர்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இத்தகைய முக்கிய துறைகளுக்குத் தகுதியான நபர்களை நியமித்திருக்க வேண்டும். லால் காந்த போன்றவர்களால் விவசாயத் துறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நிலக்கரி இறக்குமதியில் சிக்கல் நிலவுகிறது. 32 கொள்கலன்கள் கடத்தப்பட்ட சம்பவம் மற்றும் நிதி அமைச்சின் கீழ் இடம்பெற்ற நிதி முறைகேடு ஆகியவற்றால் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான முழு அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது.