போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டவர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்காக கட்சிகளை இதற்கு சம்பந்தப்படுத்தக்கூடாது. தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த பலரும் கடந்த காலங்களில் போதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டமைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்பதை ஜனாதிபதிக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டில் போதைப்பொருள் பாவனை மற்றும் வியாபாரம் அதிகரித்துள்ளது. கடந்த காலங்களிலும் இவ்வாறான நிலை இருந்துவந்தது. அதனால் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதுபோன்று கடந்த காலங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் அப்போது இருந்த அரசாங்கங்கள் எடுத்துள்ளன. அதனால் போதைப்பொருளுக்கு எதிராக கட்சி போதமின்றி அனைவரும் இணைந்து செயற்பட்டிருக்கின்றனர்.
என்றாலும் நாட்டு மக்கள் இன்று பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறார்கள். விவசாயிகள் அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கும்நிலையில் ஜனாதிபதி அந்த போராட்டங்களை மறைக்கும்வகையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை மேல் எழுப்பி இருக்கிறார். அதேநேரம் போதைப்பொருள் கைப்பற்றிய தொகையைும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால் நல்லாட்சி அரசாங்க காலத்தில் 2019ல் நாங்கள் கைப்பற்றிய போதைப்பொருள் தொகையை விட குறைவாகவே இந்த அரசாங்கம் இரண்டு வருட காலத்தில் கைப்பற்றி இருக்கிறது. அரசாங்கம் இந்த வேலைத்திட்டத்தை சத்தம் போட்டுக்கொண்டு செய்கிறது. ஆனால் நாங்கள் எந்த பிரசாரமும் மேற்கொள்ளாமல் செய்துவந்தோம்.
அதேநேரம் கடந்த காலங்களில் கொலை செய்யப்பட்ட கீத்நொயார், லசன்த் விக்ரமதுங்க பாேன்ற பட்டியை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
அதேநேரம் 88, 89 காலப்பகுதியில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர், ரூபவாஹினி கூட்டுத்தாபளத்தின் செய்தி தயாரிப்பாளர் கொலை செய்யப்பட்டார். இவ்வாறு பலர் இந்த காலப்பகுதியில் கொலை செய்யப்பட்டார்கள். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அதேபோன்று எமது கட்சி அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது தொடர்பில் நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர் தவறு செய்திருந்தால், அவருக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். ஆனால் பேலியகொடை நகரசபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் மகன் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யபட்டிருந்தார்.
அவரது கணவரும் பாேதைப்பொருளுடன் சம்பந்தப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார். அதேபோன்று இவ்வாறு தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதனால் இந்த விடயத்தில் கட்சிகளின்பால் கை நீட்ட வேண்டாம் என்றே நாங்கள் தெரிவிக்கிறோம்.
அதேபோன்று இந்த காலப்பகுதியில் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்ட எண்ணிக்கையை ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் அதனையும் விட அதிக எண்ணிக்கையிலான துப்பாக்கிகள் 2014 காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. அதனால் ஜனாதிபதி ஒரு புதிய விடயம்போல் இதனை தெரிவிக்க முயற்சிக்கிறார். அத்துடன் இந்த நாட்டில் துப்பாக்கியால் கொலை செய்வதை பிரபாகரனுக்கு கற்பித்துக்கொடுத்ததும் உங்களது கட்சி தலைவர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
எனவே போதைப்பொருள் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுபோன்று, போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளவர்களை புனர்வாழ்வளிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.