பிள்ளைகள் போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுகின்றார்களா என்பதை கண்டறிய பரிசோதனை செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை பெற்றோருக்கு ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பிள்ளைகள் போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளனரா என்பதை பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துப் பார்ப்பதற்கான விசேட போதைப்பொருள் சோதனை கருவிகளை, மருந்தகங்கள் மூலம் எளிதாகக் கொள்வனவு செய்யும் முறைமையை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பிலான சோதனைக் கருவிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
நாட்டிலிருந்து போதைப்பொருள் ஒழிப்பிற்காக நடைமுறைப்படுத்தப்படும் ‘ரடம எகட’ (நாடுமே ஒன்றாக) தேசிய செயற்பாட்டு சபை, முப்பீட மகா சங்கத்தினர் உள்ளிட்ட சமயத் தலைவர்களின் பங்கேற்புடன் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போதே இந்தத் தீர்மானம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் நவீன வசதிகளை ஏற்படுத்துதல், இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தின் பணிகளை வினைத்திறன்மிக்கதாக்குதல், இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நவீன தொழில்நுட்ப முறைகளைக் கையாளுதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தொடர்பான சட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மறுவாழ்விற்கு உட்படுத்துவதற்கான சட்டமூலமும் இறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அதனை விரைவில் வர்த்தமானி மூலம் வெளியிடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.