25 கிலோ கிராம் பொன்கொரண்டி மூலிகைத் தாவரத்தை சட்டவிரோதமாகச் சீனாவுக்குக் கடத்த முயன்ற 37 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்றைய தினம் அதிகாலை 12.10 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து ஷங்காய் நோக்கிப் புறப்படவிருந்த ‘சீனா ஈஸ்டர்ன்’ நிறுவனத்திற்குச் சொந்தமான MU-6018 என்ற விமானத்தில் பயணிப்பதற்காக விமான நிலையம் வந்திருந்தார். இதன்போது, அவரது நடத்தையில் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் அவரைச் சோதனையிட்டனர்.
அவரது பயணப் பொதிகளைச் சோதனையிட்ட போது, மிகவும் சூட்சுமமான முறையில் தேயிலை பக்கெற்றுகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 25 கிலோ கிராம் பொன்கொரண்டி மூலிகை பட்டைகள் கண்டறியப்பட்டன. கைப்பற்றப்பட்ட இந்த மூலிகைப் பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் பொன்கொரண்டி பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தாவரமாகும். இதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் செயல் சுங்கக் கட்டளைச் சட்டத்தையும் சர்வதேச வனவிலங்கு கடத்தல் தடுப்பு விதிகளையும் மீறுவதாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரச உடமையாக்கப்பட்டுள்ளதுடன், விமான நிலைய சுங்கப் பிரிவினர் மற்றும் பல்லுயிர், கலாசார மற்றும் தேசிய மரபுரிமை பாதுகாப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.