மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை வடக்கு மற்றும் தெற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுப்பது குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற தந்தை செல்வா நினைவுப்பேருரை நிகழ்வில் உரையாற்றுவதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சனிக்கிழமை (25) மாலை 4.00 மணியளவில் சுமந்திரனின் யாழ் இல்லத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், அவ்வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியிருப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள மாகாணசபைகள் முறைமையை இயங்கச்செய்யவேண்டியது அவசியம் என இங்கு வலியுறுத்தப்பட்டதுடன் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிப்பதை முன்னிறுத்தி தாம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் இருதரப்பினரும் விளக்கமளித்தனர்.
அதற்கமைய மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை வடக்கு மற்றும் தெற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேலும் இவ்விடயத்தில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதுடன், எதிர்வருங்காலங்களில் அத்தரப்புடனும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.