குருணாகல், கல்கமுவ நீதவான் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் வளாகத்திற்கு முன்பாக 37 வயதான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட தனிப்பட்ட விரோதத்தால் இந்தக் கொலை நடந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மொரகொல்லகம பகுதியை சேர்ந்த வீரரத்ன பிரதீப டி சில்வா என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதாாக அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்றுக் காலை சுமார் 09.20 மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது.
கத்திக்குத்து காயங்களால் படுகாயமடைந்த அப்பெண், உடனடியாக கல்கமுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காலை சுமார் 09.45 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும், பாணந்துறையை சேர்ந்த நிரோஷன் டி சில்வா என்ற சந்தேக நபர், கத்தியுடன் தப்பி ஓடியபோது கல்கமுவ நகரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் சில காலத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சுமார் ஏழு மாதங்களுக்கு முன்பு, அவர் சந்தேக நபரிடமிருந்து பிரிந்து வேறொருவருடன் வாழ்ந்துள்ளார். மேலும் அவர்கள் சட்டப்படி பிரியவில்லை.
முந்தைய பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் பங்கேற்பதற்காக அவர் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார். இருவருக்கும் இடையே நடந்த கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் சந்தேக நபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார்.